விஸ்கி-பிராந்தி விலை உயர்வு-பீருக்கு தட்டுப்பாடு
குளிர்காலத்தை விட வெயில் காலத்தில்தான் பீர் விற்பனை அமோகமாக இருக்கும். அதிலும் ஐஸ் பீர்தான் 'குடி மகன்களின்' ஏகோபித்த வரவேற்புக்குரியது. வெயில் காலங்களில் கேஸ் கேஸாக ஐஸ் பீர் காலியாகி வரும்.
இந்த கோடை காலமும் அதற்கு விதி விலக்கல். வழக்கம் போலவே பீருக்கு செம கிராக்கி. இதன் காரணமாக பீர் விற்பனை உயர்ந்து, சப்ளை தட்டுப்பாட்டை சந்தித்துள்ளது.
இதில் கொடுமை என்னவென்றால், அரசு நடத்தி வரும் டாஸ்மாக் கடைகளில் சிங்கம் மார்க் பீர், புலி மார்க் விஸ்கி, சிறுத்தை மார்க் பிராந்தி என அவர்கள் இஷ்டத்திற்கு எதையாவது கொடுப்பதுதான்.
ஜில்லென்று ஏதாவது உள்ளே போனால் போதும் என்ற நினைப்பில் குடிமகன்களும் கிடைத்த பீரை குடித்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் தற்போது பீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.
கோடையில் 45.8 லட்சம் பீர் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 60 லட்சம் பெட்டிகள் பிராந்தி, விஸ்கி மது வகை விற்பனையானது. இது கடந்த ஆண்டை விட 9 சதவீதம் அதிகமாகும்.
பீர் தேவையான அளவுக்கு மதுபான ஆலைகளில் உற்பத்தி செய்து வழங்க முடியவில்லை. தேவை அதிகமாக இருப்பதால் அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து பீர் வாங்கி வழங்கப்படும்.
ஆனால் தேர்தல் நேரத்தில் ஏற்பட்ட கூடுதல் தேவையை மற்ற மாநிலங்களில் இருந்து வாங்கி பூர்த்தி செய்ய இயலவில்லை. தேவைக்கேற்ற அளவிலான பீர் பாட்டில்களை மதுபான ஆலைகளால் சப்ளை செய்ய முடியவில்லை. தேவையான அளவு பீர் சப்ளை செய்யாததால் விற்பனை குறைந்தது.
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒரு நாளைக்கு 80 ஆயிரம் பீர் பாட்டில் பெட்டிகள் விற்பனையாகும். கோடைகாலத்தில் சராசரியாக ஒவ்வொரு மாதத்திலும் 21 லட்சம் பீர் பாட்டில் பெட்டிகள் விற்பனையாகிறது.
மதுபான மொத்த விற்பனையில் பீர் பாட்டில் விற்பனை மட்டும் 13 சதவிகிதம். உள்நாட்டில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்கள் விற்பனை கடந்த ஆண்டை விட 9 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்த விற்பனை உயர்வுக்கு முக்கிய காரணம் நாடாளுமன்றத் தேர்தலாகும்.
தேவையான அளவிற்கு பீர் சப்ளை செய்ய முடியாததற்கு காரணம் பாட்டில் பற்றாக்குறையாம். பீர் பாட்டில்கள் ஒன்று அல்லது 2 முறை மட்டுமே சுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்த முடியும்.
ஒவ்வொரு கோடையிலும் பீர் தேவை உயருகிறது. ஆனால் அந்த அளவிற்கு பாட்டில்கள் உற்பத்தி செய்யப்படாததே தட்டுப்பாடுக்கு காரணம் என்று மதுபான தயாரிப்பாளர் தரப்பில் கூறப்படுகிறது.
பாட்டிலின் விலை, போக்குவரத்து செலவு உயர்வுக்கு ஏற்றவாறு மது பானத்தின் விலையை அரசு உயர்த்துவது இல்லை. அதனால் ஏற்படும் நஷ்டத்தால் பாட்டில்களை அதிகம் வாங்குவது இல்லை என்று மதுபான தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள்.
அதேசமயம், பிராந்தி, விஸ்கி வகைகள் தாராளமாக கிடைக்கின்றன. ஆனால் அவற்றின் விலை கொஞ்சம் ஹாட் ஆகவே உள்ளன.
''குடிக்கலாம்னு கடைக்கு ஒதுங்குனா விலையைக் கேட்டதுமே மப்படிக்கும் ரோசனை போயிருதே'' என்று குடிமக்கள் புலம்புவதைக் கேட்க முடிகிறது.