ஆட்சியில் பங்கு-நாளை காங் எம்எல்ஏக்கள் கூட்டம்: ப.சி, வாசனும் பங்கேற்பு
உபி, பிகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய வட மாநிலங்களில் பெரும் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் தென்னகத்திலும் கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
தமிழகத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இல்லாத நிலையில் கட்சியை பலப்படுத்தும் பொறுப்பை ராகுல் காந்தி கையில் எடுத்துள்ளார்.
முதல் கட்டமாக ஆட்சியில் பங்கேற்றால்தான் கட்சியைப் பலப்படுத்த முடியும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ராகுலிடம் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
அவரும் ஆட்சிக்கு பங்கு குறித்து ஆலோசிக்கும்படி தமிழக தலைவர்களுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து எம்எல்ஏக்கள் அவ்வப்போது கூடி ஆட்சியில் பங்கு வேண்டும் என்று தீர்மானங்கள் போட்டு வருகின்றனர்.
இந் நிலையில் 5 நாட்களில் தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது. இதையொட்டி காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் நாளை சத்தியமூர்த்தி பவனில் கூட்டப்பட்டுள்ளது.
வழக்கமாக கூட்டத் தொடர் நடக்கும் நாளுக்கு முந்தைய நாளோ அல்லது அதே நாளிலோ தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கும். அதி்ல் சட்டமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும்.
ஆனால், இம்முறை 4 நாட்களுக்கு முன்னரே கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு அனைத்து 35 எம்எல்ஏக்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமை தாங்குகிறார்.
இதில் எப்போதுமி்லலாத வகையில் மத்திய அமைச்சர்களான ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் ஆகியோரும் பங்கேற்கின்றனர். இதனால் இக் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இக் கூட்டத்தில் திமுக ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து விவாதிக்கப்படுகிறது. எம்எல்ஏக்களின் கருத்துக்களைக் கேட்டு அதை சிதம்பரமும் வாசனும் கட்சித் தலைமையிடம் தெரிவிப்பர் என்று தெரிகிறது.
இதற்கிடையே நாளை சத்தியமூர்த்தி பவன் வரும் வாசனுக்கு போட்டியாக சிதம்பரத்திற்கும் வரவேற்பு கொடுக்க, அவரது ஆதரவாளர்கள் கூட்டம் கூட்டும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.