குட்டினால், முட்டி போட வைத்தால்-பள்ளிகளுக்கு எச்சரிக்கை
சென்னை: பள்ளிக்கூட மாணவர்களின் தலையில் குட்டுவது, வெயிலில் முட்டி போட வைப்பது, நிற்க வைப்பது, அடிப்பது உள்ளிட்ட எந்தக் கடுமையான தண்டனைடையும் பள்ளி நிர்வாககங்கள் அளிக்கக் கூடாது. அப்படிச் செய்தால் அந்தப் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்குநரகம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளிக்கூடங்கள் தற்போது திறந்து செயல்படத் தொடங்கியுள்ளன. பல பள்ளிகளில் தொடர்ந்து மாணவர் சேர்க்கையும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் வழக்கம் போல இந்த முறையும் கல்வித்துறைக்கு மாணவர்களிடமிருந்தும், பெற்றோர்களிடமிருந்தும் புகார்கள் வந்துள்ளன.
கூடுதல் கட்டணம் கேட்பதாகவும், தண்டனை என்ற பெயரில் மாணவர்களை வெயிலில் நிற்க வைப்பது, தலையில் குட்டுவது, பிரம்பால் அடிப்பதாகவும் அந்தப் புகார்கள் கூறுகின்றன.
கிட்டத்தட்ட 65 வகை புகார்கள் பள்ளிக் கல்வித்துறைக்கு வ்நதுள்ளது. இதையடுத்து இத்தகைய செயல்களில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம் என்று எச்சரித்து அது தொடர்பான அரசு உத்தரவு அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எந்த ஒரு மாணவரையும் அடிக்கக்கூடாது. வெயிலில் நிற்க வைத்தல், முதுகில் செங்கலை சுமக்க வைத்தல், தலையில் குட்டுதல் உள்ளிட்ட எந்த ஒரு தண்டனையையும் கொடுக்கக்கூடாது.
பள்ளியில் உள்ள வேலைகளை மாணவர்களை கொண்டு செய்யக் கூடாது. மாணவர் சேர்க்கையின்போது நன்கொடை வாங்கக் கூடாது. அது குற்றமாகும்.
மாற்று சான்றிதழ் கொடுக்கும்போதும் பணம் வாங்கக் கூடாது. பள்ளிகளில் மேற்கண்ட எந்த குற்றமாவது நடக்கிறதா? என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க முதன்மை கல்வி அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.