For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவில் 16 பேருக்கு பன்றிக் காய்ச்சல் - ஆசாத்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் இதுவரை 16 பேருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் பீதி அடையத் தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆசாத் கூறுகையில், லெவல் 6 தான் பன்றிக் காய்ச்சலின் அபாய கட்ட அளவாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த அளவை இன்னும் இந்தியா எட்டவில்லை. எனவே இதுகுறித்து மக்கள் பீதி அடையத் தேவையில்லை என்றார்.

ஏற்கனவே 15 பேர் ஸ்வைன் ப்ளூவுக்கு பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று ஹைதராபாத்தில் 6 வயது சிறுமிக்கு பன்றிக் காய்ச்சல் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த சிறுமி தனது பெற்றோருடன் ஜூன் 10ம் தேதி அமெரிக்காவிலிருந்து ஹைதராபாத் திரும்பியிருந்தாள். வந்தவுடன் அவளுக்கு உடல் நலம் சரியில்லாமல் போகவே சோதனை செய்து பார்க்கப்பட்டது.

அதில், அவளுக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டிருப்பது உறுதியானது. ஹைதராபாத்தில் மட்டும் இந்தக் குழந்தையுடன் சேர்த்து 8 பேருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பன்றிக் காய்ச்சல் குறித்து குலாம் நபி ஆசாத் கூறுகையில், நமது நாட்டின் மக்கள் தொகை மற்றும் அளவுடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை மிகவும் குறைவுதான்.

பீதி அடைய எந்தக் காரணமும் இல்லை என்றார்.

சென்னையில் 5 பேருக்கு ஸ்வைன்?

இதற்கிடையே, அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய டாக்டர் குடும்பத்தினருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த டாக்டர் முரளி, மனைவி சரிகா, அவர்களுடைய 3 குழந்தைகள் அமெரிக்காவிலிருந்து வந்தனர்.

அவர்கள் அனைவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்படவே பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாமோ என்ற பீதியில், தண்டையார்பேட்டை தொற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையில் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.

இருப்பினும் சோதனை முடிவில் அவர்கள் யாருக்கும் பன்றிக் காய்ச்சல் தொற்றவில்லை என்பது தெரிய வந்தது.

பெங்களூரில் 2 பேருக்கு அறிகுறி

இதற்கிடையே, அமெரிக்காவிலிருந்து பெங்களூர் வந்த இருவருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி தெரிந்ததால் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு இருவரும் பெங்களூர் விமான நிலையம் வந்து சேர்ந்தனர். அங்கு அவர்களது ரத்த மாதிரி எடுத்து பரிசோதிக்கப்பட்டது.

இதையடுத்து இருவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதற்கிடையே, ஏற்கனவே பன்றிக் காய்ச்சல் தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெங்களூரைச் சேர்ந்த இருவர், மங்களூரைச் சேர்ந்த ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐந்து பேரின் ரத்த முடிவுக்காக டாக்டர்கள் காத்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X