மதிய உணவில் பாம்புகறி-55 மாணவர்கள் வாந்தி
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கிராம அங்கன்வாடி மையத்தில் மதியம் பாம்பு விழுந்த உணவுபறிமாறப்பட்டது. இதில் 55 மாணவர்களுக்கு வாந்தி ஏற்பட்டது.
மேற்கு வங்க மாநிலத்தில் பிர்பூம் மாவடத்தில் கபிராஜ்பாரா என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள ஐசிடிஎஸ் (அங்கன்வாடி) மையத்தில் நேற்று மதிய உணவு வழங்கப்பட்டு கொண்டிருந்தது.
அப்போது ஒரு மாணவருக்கு உணவு பறிமாறப்பட்ட போது, அதில் பாம்பு ஒன்று இறந்துகிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த உணவை சாப்பிட்ட 55 மாணவர்களுக்கு வாந்தி ஏற்பட்டது. அவர்களது உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து அப்பகுதியின் கல்வி அதிகாரி சென்குப்தா என்பவர் கூறுகையில், பள்ளியின் சமையலறை பழைய கூரை பகுதியில் இருக்கிறது. கூரையின் மேல் இருந்த பாம்பு ஏதேச்சையாக சமையல் பாத்திரத்தில் விழுந்துள்ளது. ஒரு மாணவரி்ன் தட்டில் பாம்பு விழுந்த போது தான் அது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உணவில் பாம்பை கண்ட குழந்தைகள் பயந்துவிட்டன என்றார்.
இது குறி்த்து மருத்துவமனையின் சூப்பிரன்டன்ட் ஹிமாதரி ஹல்தர் கூறுகையில், அந்த உணவில் பாம்பின் விஷம் கலக்கவில்லை. குழந்தைகள் பாம்பு விழுந்த உணவை சாப்பிட்ட அருவருப்பில் வாந்தி எடுத்துள்ளனர் என்றார்.