மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால்தான் சேதுவை எதிர்க்கிறேன் - ஜெ.
இதுதொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை:
முகாம்களில் வாழும் அப்பாவி இலங்கைத் தமிழர்களுக்கு மறு வாழ்வு அமைத்துத் தருவது உட்பட அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தர மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தி இருந்தேன். அதற்கு பதில் அளிக்கும் விதமாக ஓர் அறிக்கையை முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டிருக்கிறார்.
2006-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை தேர்தலின் போது வெளியிட்ட அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறியிருப்பதாக கருணாநிதி தன்னுடைய அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.
சேது சமுத்திரக்கால் வாய்த்திட்டம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆராலும் தொடர்ந்து என்னாலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்ட திட்டம் என்பதை நான் மறுக்கவில்லை.
ஆனால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் 3600 -க்கும் மேற்பட்ட கடல் உயிரினங்கள் மற்றும் கடல் தாவரங்கள் அழிந்து விடும் என்று சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் தெரிவித்ததன் அடிப்படையிலும், மும்பை இயற்கை வரலாறு குழுமம் சேதுசமுத்திரக்கால்வாய்த்திட்டத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்த அறிக்கையில் முரண்பாடுகள் இருப்பதாக தெரிவித்ததன் அடிப்படையிலும், சேதுக் கால்வாய்த் திட்டத்தினால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று பல லட்சக்கணக்கான மீனவப் பெருமக்கள் கருத்து தெரிவித்ததன் அடிப்படையிலும் தான், பொது மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அ.தி.மு.க. இந்தத் திட்டத்தை எதிர்க்க ஆரம்பித்தது.
அ.தி.மு.க. வை பொறுத்த வரையில் மக்களுக்காகவே திட்டம் என்பதில் உறுதியாக உள்ளது.
இலங்கை தமிழர்கள் பிரச்சினை உட்பட அனைத்துப் பிரச்சினைகளிலும் எனக்கு உள்ள தன்னலமற்ற அக்கறையை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். அப்பாவி இலங்கை தமிழர்கள் பயன் அடையும் வண்ணம், மனிதாபிமான அடிப்படையில், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக எடுக்க கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.