பாஸ்போர்ட்-நெல்லையில் போலி் சான்றிதழ் கொடுத்த இருவர் கைது
நெல்லை: போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்த நெல்லையை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு போலி சான்றிதழ் வழங்கியவரை தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்தவர்கள் சாகுல் அமீது பாதுஷா (22), ரசூல் சாகுல் அமீது(34). இவர்கள் இருவரும் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வதற்காக பாஸ்போர்ட் கேட்டு மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்தனர்.
இதில் மேலப்பாளையம் நகராட்சி அலுவலகம் கொடுத்ததாக கூறி பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்தனர். ஆனால், அந்த சான்றிதழ் குறித்து பாஸ்போர்ட் அலுவலருக்கு சந்தேகம் ஏற்படவே, அவர் நெல்லை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார்.
இதனையடுத்து அந்த பிறப்புச் சான்றிதழ்கள் குறித்து பாளை போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் சாகுல் அமீது பிறப்புச்சான்றிதழில் இல்லாத பாதுஷா என்ற பெயரை சேர்த்து விண்ணப்பித்ததும், ரசூலும் இதே போல சில திருத்தங்கள் செய்து போலியான சான்றிதழ் தயாரித்ததும் தெரிய வந்தது.
இதனையடு்த்து அவர்கள் இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு சான்றிதழ் தயாரித்து கொடுத்த நபரை போலீசார் தேடிவருகின்றனர்.