தலித்களுடன் ராகுல் பிறந்தநாள் - வாக்கு வங்கியை வசீகரிக்க காங். திட்டம்
உத்தர பிரதேசம் முதல்வர் மாயாவதியின் தலித் பலத்தை தகர்க்க அடுத்தடுத்து நடவடிக்கைகளை முடுக்கி விட்டு வருகிறது காங்கிரஸ்.
உ.பியில், மாயாவதியையும் தாண்டி பெரும் வெற்றியைப் பெற்ற காங்கிரஸ் அடுத்து, லோக்சபா சபாநாயகராக தலித் வகுப்பைச் சேர்ந்த மீரா குமாரை நிறுத்தி வெற்றி பெற வைத்தது.
இந்த நிலையில் மாயாவதியின் வாக்கு பலமான தலித்களை மேலும் ஈர்க்கும் வகையில், ராகுல் காந்தி பிறந்த நாளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து ராகுலின் பிறந்தநாளான ஜூன் 19ம் தேதி உத்தர பிரதேசத்தில் உள்ள தலித் மக்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் சமுதாய விருந்து படைக்க காங்கிரஸ் சுறுசுறுப்பாக இயங்கி வருவதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் ரிதா பகுகுனா ஜோஷி தெரிவித்துள்ளார்.
அன்றைய தினத்தை நல்லிணக்க நாளாக உத்தர பிரதேச காங்கிரஸ் கொண்டாடும். இந்த விருந்தில் அனைத்து சமுதயா மக்களும், கட்சி தொண்டர்களும் பங்கேற்பார்கள் என தெரிகிறது.
இதன் மூலம் சமுதாயத்தில் நல்லிணக்கத்தை உண்டாக வேண்டும் என்றும், 2012ல் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்ற வேண்டும் எனவும் காங்கிரஸ் விரும்புவதாக தெரிகிறது.
அதிக எம்.பி.க்களை கொண்ட உத்தரபிரதேசத்தில் ஒற்றை இலக்கத்தில் தொகுதிகளை கைப்பற்றி வந்த காங்கிரஸ் சமீபத்தில் முடிந்த தேர்தலில் ராகுலின் தேர்தல் பிரச்சாரம் காரணமாக 20 தொகுதிகளை வென்று, பாஜகவை பின்தள்ளியது குறிப்பிடத்தக்கது.
தலித்களைக் கவரும் வகையில் ராகுல்காந்தியின் பிறந்த நாளை காங்கிரஸ் பயன்படுத்தும் என்றாலும் கூட ராகுல் காந்தி தனது பிறந்த நாளை லண்டனில் கொண்டாடவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.