இலங்கை முகாம்களில் 30 தமிழர்கள் பட்டினிக்கு சாவு
கொழும்பு: இடம் பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியிருந்த 30 தமிழர்கள் உணவின்றி பட்டினியால் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விடுதலை புலிகளுக்கு எதிரான போர் என்று சொல்லி கொண்டு இலங்கை ராணுவம் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தது. மேலும், கடைசிக்கட்ட போரில் ஒரிரு நாட்களில் சுமார் 20 ஆயிரம் தமிழர்களை கொன்று இனப்படுகொலை அரங்கேற்றியது.
தற்போது போர் முடிந்த நிலையில் அப்பாவி தமிழர்கள் சுமார் 3 லட்சம் பேர் அங்கிருக்கும் ஒரு சில கூடாரங்களுக்குள் முண்டியடித்து வாழ்கின்றனர். அவர்களுக்கு மருந்து, உணவு போன்ற அடிப்படை வசதிகளை இலங்கை அரசு செய்ய மறுத்துவருகிறது.
மேலும், புலம்பெயர்ந்த தமிழர்கள் அனுப்பிய நிவாரணப் பொருட்களுடன் வந்த வணங்கா மண் என்ற கப்பலையும் இலங்கை ராணுவம் சோதனை என்ற பெயரில் தடுத்து நிறுத்தியது.
இந்நிலையில் கொழும்புவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குனர் பாக்கியசோதி சரவணமுத்து என்பவர் இலங்கை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
40 முகாம்களில் 3லட்சம் பேர்...
அதில்,
வடக்கில் வவுனியா, மன்னார், திரிகோணாமலை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் 40 முகாம்களில் சுமார் 3 லட்சம் தமிழர்கள் அகதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த முகாம்களில் இதுவரை 30 பேர் பட்டினி காரணமாக மரணமடைந்திருப்பதாக வவுனியா கலெக்டர் உறுதி செய்துள்ளார்.
முகாம்களில் சுகாதார வசதி கொஞ்சமும் இல்லை. அவர்களுக்கு மருத்துவ வசதியும் கிடைக்கவில்லை.
இந்த முகாம்கள் சிறைசாலையை விட கொடியதாக இருக்கிறது. தமிழர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நோகடிக்கும் வகையில் இந்த முகாம்கள் நிர்வகிக்கப்படுகின்றன.
இதில் அப்பகுதியை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும் அடைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.