அதிபர் தேர்தலில் மோசடி எனக் கூறி ஈரானில் பெரும் கலவரம்
டெஹ்ரான்: அதிபர் தேர்தலில் மோசடி நடந்ததாக தோல்வியடைந்த முன்னாள் பிரதமர் மீர் உசேன் மெளசவி தெரிவித்தையடுத்து அங்கு பெரும் கலவரம் வெடித்துள்ளது. கலவரத்தில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரான் அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் தற்போதைய அதிபர் மஹமூத் அகமதிநிஜாத் 62.6 சதவீத வாக்குகள் பெற்று வென்றதாக அறிவிக்கப்பட்டது.
இவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் பிரதமர் மீர் உசேன் மெளசமிக்கு 33.7 சதவீத வாக்குளே மட்டுமே கிடைத்தது. ஆனால், கருத்துக்கணிப்புகள் மெளசமி தான் வெற்றி பெறுவார் என கூறியிருந்தன.
இந்நிலையில் மௌசமி தேர்தலில் நான்தான் வெற்றி பெற்றுள்ளேன். ஆனால் கடைசி நேரத்தில் மோசடி நடந்துள்ளது என குற்றம்சாட்டினார். இது திருட்டு தேர்தல் என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்தப் பின்னணியில் மெளசமியின் ஆதரவாளர்கள் கலவரத்தில் குதித்தனர். தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட பல பகுதிகளில் கலவரம் வெடித்துள்ளது.
இதையடுத்து மெளசமியின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுக்கு போலீசுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. இதில் போலீசார் மீது கல், அழுகிய முட்டை போன்றவை வீசப்பட்டது.
போலீசாரின் வாகனங்கள் தீக்கிரையாகின. இதையடுத்து மெளசமியின் ஆதரவு அமைப்பான ஈரான் இஸ்லாமிய பங்கேற்பு முன்னணியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்களை போலீஸார் கைது செய்தனர். பின்னர் எச்சரித்து விடுவித்தனர்.
சோதனை காலம்-ஆஸ்திரேலியா...
இதற்கிடையே, ஈரான் அதிபர் தேர்தலில் அகமதிநிஜாத் மீண்டும் வென்று இருப்பது சர்வதேச சமுதாயத்துக்கு சோதனை காலம் என ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ருத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
ஈரான் தனது அணுஆயுத போக்கை மாற்றி கொள்ள வேண்டும். இது அப்பகுதியில் நிலைத்தன்மையை குறைந்து வருகிறது. நாங்கள் அமைதியை விரும்புகிறோம்.
அகமதிநிஜாத் தற்போது கிடைத்திருக்கும் பதவி வாய்ப்பை பயன்படுத்தி அமெரிக்காவுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.