காங்கிரசிலிருந்து மீரா விலக வேண்டும்-சோம்நாத்
டெல்லி: மக்களவை சபாநாயகராக பொறுப்பேற்பவர்கள் கட்சி விருப்பு, வெறுப்பு அற்றவராக இருக்க வேண்டும். இதனால் மீரா குமார் காங்கிரசில் இருந்து விலக வேண்டும் என முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
கடந்த மக்களவையின் சபாநாயகராக இருந்தவர் சோம்நாத் சட்டர்ஜி. அணுசக்தி ஒப்பந்தத்தின் போது காங்கிரஸ் அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை மார்க்சிஸ்ட் விலகி கொண்ட போது தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். இதையடுத்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,
சபாநாயகர் பதவியில் இருக்கும் ஒருவர் எந்த கட்சிக்கு சார்பாக பேசக்கூடாது. கட்சி விருப்பு, வெறுப்பின்றி செயல்பட வேண்டும். இதற்கு அவர் தனது கட்சியிலிருந்து விலகுவது தான் சரியாக இருக்கும். இல்லையென்றால் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும்.
இடதுசாரிகள் தங்களது கோட்டைகளாக மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் தோல்வியடைந்துள்ளது. இதற்கு தற்போது இருக்கும் தலைமை தான் காரணம். பிரகாஷ் காரத்தின் தவறான வழிகாட்டுதல்களால் தான் கட்சியை இந்த இரண்டு மாநிலங்களிலும் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.
கேரளாவில் உட்கட்சி பூசல் அதிகரித்துவிட்டது. பொலிட்பீரோ உறுப்பினரான பினரயி விஜயன் மீது ஊழல் புகார் சுமத்தப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதை விசாரிக்க ஆளுனரும் உத்தரவிட்டுள்ளார்.
இது போன்ற ஊழல் குற்றத்துக்காக இடதுசாரிகள் லாலு பிரசாத், அத்வானி மீது குற்றம்சாட்டினர். இந்த விஷயத்திலும் அவர்கள் இதே நிலையை பின்பற்ற வேண்டும் என்றார் சோம்நாத் சட்டர்ஜி.