மூளைச்சாவு-அரியலூர் பெயிண்டர் உடல் தானம்
தஞ்சாவூர்: மாடியில் இருந்து தவறிவிழுந்து மூளைச்சாவை சந்தித்த அரியலூர் பெயிண்டரின் உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானம் செய்தனர்.
அரியலூர் மாவட்டம் வாலாஜாநகரத்தை சேர்ந்தவர் புயல்வெங்கடேசன். பெயின்டராக வேலை பார்த்து வந்தார். இவரது தாயார் எலிசபெத்.
கடந்த ஜூன் 9ம் தேதி தொண்டபாடி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு வெள்ளையடிக்க சென்றார். இரண்டாவது மாடியில் வெள்ளையடித்து கொண்டிருந்த போது அவர் நின்று வெள்ளையடித்து கொண்டிருந்த கட்டையின் கயிறு அறுந்தது.
இதில் நிலை தடுமாறிய வெங்கடேசன் கீழே விழுந்தார். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது. இதையடுத்து அவரை அருகிலிருந்தவர்கள் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் நேற்று காலை மூளைச்சாவு அடைந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அவர் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்பதை எடுத்துரைத்த டாக்டர்கள். அவரது உறுப்புகளை மற்றவர்களுக்கு தானமாக வழங்குவது குறித்து அவரது தாயாருக்கு எடுத்து கூறினர்.
அவரும் அதற்கு சம்மதம் அளிக்கவே, சென்னை அப்பலோ மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வெங்கடேசனின் உடல் திருச்சிக்கு கொண்டுவரப்பட்டு அங்கு ஏபிசி மருத்துவமனையில் உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது.
அவரது சிறுநீரகங்கள், கண்கள், இதய வால்வுகள் போன்றவை பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு வழங்கப்பட இருக்கிறது.