மீண்டும் ஒரு முறை பேச முடிவு - என்எல்சி ஸ்டிரைக் தள்ளிவைப்பு
புதுச்சேரி: என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று முதல் மேற்கொள்வதாக இருந்த வேலைநிறுத்தம் 20ம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 19ம் தேதியன்று சென்னையில் 3வது கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அதில் உடன்பாடு ஏற்படாவிட்டால் 20ம் தேதி முதல் ஸ்டிரைக் தொடங்கும் என தொழிலாளர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களும், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.
இதையடுத்து முதல் கட்டமாக சென்னையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து நேற்று புதுச்சேரியில் 2வது கட்டமாக பேச்சுவார்த்தை நடந்தது. இது தோல்வி அடைந்தால் இன்று முதல் ஸ்டிரைக் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
நேற்று புதுச்சேரியில் உள்ள தொழிலாளர் சட்ட செயலாக்க அலுவலர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.
சென்னை தொழிலாளர் நல உதவி ஆணையர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். புதுவை தொழிலாளர் நல அமலாக்க அதிகாரி அந்தோணி அடிமை, என்.எல்.சி. அதிகாரிகள் குருசாமிநாதன், பிரபு, என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர் சங்க (ஏ.ஐ.டி.யூ.சி.) மாவட்ட செயலாளர் சேகர், துணை செயலாளர் துரை, துணைத்தலைவர் ராயப்பன், அலுவலக செயலாளர் நடராஜன், காண்டிராக்டர்கள் சங்க தலைவர் கோவிந்தராஜன், துணைத்தலைவர் ராமதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
காலை தொடங்கி மாலை வரை நடந்த கூட்டத்தில் உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை.
இதையடுத்து நேற்று இரவு நெய்வேலி புது நகரில் என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், ஏ.ஐ.டி.யூ.சி. கடலூர் மாவட்ட செயலாளர் எம்.சேகர் பேசுகையில், திங்கள் கிழமை நடைபெறுவதாக இருந்த வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. வருகிற 19-ந் தேதி மீண்டும் சென்னையில் உதவி தொழிலாளர் நல ஆணையர் ராஜேந்திரன் முன்னிலையில் இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்.
அப்போதும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் 20-ந் தேதி காலை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்றார்.
இதையடுத்து இப்போதைக்கு ஸ்டிரைக் தள்ளிப் போயுள்ளது.