நடப்பு நிதியாண்டில் 1 பில்லியன் டாலர் வருவாய் - டைட்டன் இலக்கு
நகைகள், கைக்கடிகாரம் உள்ளிட்டவற்றின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது டாடா குழுமம் மற்றும் தமிழ்நாடு தொழில் வர்ச்சிக் கழகத்தின் கூட்டு அமைப்பான டைட்டன் இன்டஸ்ட்ரீஸ்.
நடப்பு நிதியாண்டில் தனது நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு நிதியாண்டில் 1 பில்லியன் டாலர் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் 65 சதவீத வருவாய், தங்க நகைகள் விற்பனை மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
2008-09 நிதியாண்டில் டைட்டன் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ. 3847.72 கோடியாக இருந்தது.
மொத்த வருவாயில் நகைகள் மூலம் கிடைத்த வருமானம் ரூ. 2763.2 கோடியாகும். கைக்கடிகாரங்கள் மூலம் கிடைத்த வருவாய் ரூ. 908.49 கோடியாகும். மீதமுள்ள வருவாய், கண்கண்ணாடி, பொறியியல் சாதனங்கள் மூலம் கிடைத்தது.
கோல்ட்பிளஸ் மற்றும் டனி்ஸ்க் கடைகள் மூலம் டைட்டனின் நகைகள் விற்கப்படுகின்றன.
ஊரக சந்தையை கோல்ட் பிளஸ் நிறுவனம் கவனிக்கிறது. பெருநகரங்களில் டனிஸ்க் கடைகள் விற்பனையை மேற்கொள்கின்றன.
அடுத்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் கோல்ட் பிளஸ் நிறுவனம் ரூ. 2000 கோடி வருவாயை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோல்ட் பிளஸ் கடைகள் முதன் முதலில் 2005ம் ஆண்டு தமிழகத்தின் ஈரோட்டில் தொடங்கப்பட்டன. முதலில் இரு கடைகள் தொடங்கப்பட்டன. பின்னர் மத்தியப் பிரதேச மாநிலம் ரட்லாமில் கிளைகள் தொடங்கப்பட்டன. தற்போது மொத்தம் 30 கடைகள் கோல்ட் பிளஸுக்கு உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.