நெல்லையில் அல் உம்மா பிரமுகர் 12 ஆண்டுகளுக்கு பின் கைது
நெல்லை: நெல்லையில் நடந்த கொலை வழக்கில் தேடப்பட்ட அல் உம்மா பிரமுகர் 12 ஆண்டுகளுக்கு பிறகு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த 1996ம் ஆண்டு இரு சமுகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கடந்த 1997ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி மேலப்பாளையம் பாரதியார் தெருவை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன்(30) என்பவர் ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அவரது தம்பி
முருகனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த கொலை வழக்கில் 23 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து 21 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை விரைவு நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது வழக்கு விசாரணையில் பலரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்த கொப்புளான் என்ற சாகுல் அமீது(35) மட்டும் தலைமறைவாக இருந்தார். இதனால் இவர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், நெல்லையில் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் அல் உம்மா அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக போலீஸ் வட்டாரம் கூறுகிறது.