செக்ஸ் தொல்லை-சென்னையில் லண்டன் போலீஸ்
சென்னை: சென்னையில் உள்ள தனியார் பள்ளி மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை தந்த லண்டன் கிரிக்கெட் பயிற்சியாளர் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் விசாரணை மேற்கொள்ள லண்டன் போலீஸ் சென்னை வந்துள்ளது.
சென்னை ஷெனாய் நகரில் புனித ஜார்ஜ் ஆங்கிலோ-இந்திய பள்ளி ஒன்றில் மாணவிகளுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்க இங்கிலாந்தை சேர்ந்த மேத்திவ் ஹாட்ரிக் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன் வந்திருந்தார்.
பள்ளிக்கு சொந்தமான காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் கோவளம் வில்லேஜ் பகுதியில் உள்ள ஒரு ரெஸ்ட் அவுசில் அவர் மூன்று ஆண்டு தங்கியிருந்தார். ஓய்வு பெற்ற ஆசிரியரான மேத்திவ், பேட்மேன் அறக்கட்டளை என்ற இங்கிலாந்து அமைப்பின் மூலம் மாணவிகளுக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2006ல் அவர் மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக புகார் செய்யப்பட்டது. இதையடுத்து அவர் அங்கிருந்து இங்கிலாந்துக்கு தப்பியோடிவிட்டார்.
இதையடுத்து அவரை சென்னைக்கு பயிற்சி அளிக்க அனுப்பிவைத்த பேட்மேன் அறக்கட்டளைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் லண்டன் போலீசில் புகார் தெரிவிக்க, மேத்திவ் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து இந்த வழக்கில் விசாரணை மேற்கொள்ள நான்கு பேர் கொண்ட இங்கிலாந்து போலீஸ் குழு சென்று சென்னை வந்தது. அவர்கள் பள்ளியின் முதல்வர் பால் விக்டர் சாமுவேல் உட்பட மூன்று பேரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இதை தொடர்ந்து அவர்கள் சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரத்தையும் விரைவில் சந்தித்து, இந்த வழக்கு குறித்து ஆலோசிக்க இருக்கின்றனர். இங்கிலாந்து போலீஸ் குழுவினர் வரும் 24ம் தேதி வரை சென்னையில் இருப்பார்கள் என தெரிகிறது.