அதிபர் தேர்தல்: ஈரானில் கலவரம்-7 பேர் பலி, மறுவாக்கு எண்ணிக்கை
ஈரானில் அதிபர் தேர்தல் கடந்த 12ம் தேதி நடந்தது. அதில் அதிபர் மஹ்மூத் அகமதிநிஜாத் அதிகபட்ச வாக்குகள் பெற்று வென்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து தோல்வியடைந்த எதிர்கட்சி தலைவர் மெளசவி வாக்கு எண்ணிக்கையில் பெரும் மோசடி நடத்திருப்பதாக குற்றம் சாட்டினார்.
இதையடுத்து மெளசவியின் ஆதரவாளர்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கும் போலீசாருக்கு கடும் மோதல் நடந்து வருகிறது. பல இடங்களில் பஸ்கள், வாகனங்கள் எரிக்கப்பட்டன. கலவரத்தை அடக்க போலீசார் பல இடங்களில் தடியடி நடத்தினர்.
இந் நிலையில் கலவரக்காரர்கள் ராணுவ முகாம் ஒன்றை தாக்கினர். அப்போது ராணுவம் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் துப்பாக்கி குண்டுகளால் அடிபட்டு படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் போலீசார், ராணுவத்தின் உதவியுடன் பல்கலைக்கழகம் ஒன்றுக்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்ட பல மாணவர்களை கைது செய்தனர். மேலும் பலரை கைது செய்ய முயற்சித்த நிலையில் மாணவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். சுமார் 3,000 மாணவர்கள் பல்கலைக்கழக கூரை மீது அமர்ந்து கொண்டு அதிபர் ஒழிக என கோஷமிட்டனர்.
மறுவாக்கு எண்ணிக்கை...
இந்நிலையில் திடீர் திருப்பமாக ஈரான் மதத்தலைவர் அயதுல்லா அலி கொமேனி தேர்தல் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து விரைவில் மறுவாக்கு எண்ணிக்கை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.