இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதராக கிருஷ்ணமூர்த்தி நியமனம்
இலங்கையில் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்டப் போர் நடந்த கடந்த மூன்று ஆண்டு காலமாக அம்ஸா, சென்னையில் பணியாற்றி வந்தார்.
புலிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் குரல் எழுந்தபோதெல்லாம் இந்தியத் தலைமையுடன் தொடர்பு கொண்டு போராட்டத்தை தணிய வைத்தார் என்பதற்காக அவரைப் பாராட்டி கெளரவிக்கும் வகையில் லண்டனில் உள்ள துணைத் தூதரகத்திற்கு அவரை மாற்றி பரிசளித்துள்ளார் அதிபர் ராஜபக்சே.
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் லண்டன் துணைத் தூதரக பொறுப்பை ஏற்கிறார் அம்ஸா.
விரைவில் லண்டன் செல்லவுள்ளார் அம்ஸா. தற்போது லண்டனில் துணைத் தூதரகா உள்ள சுமித் நகந்தலா, கொழும்பில் உள்ள சார்க் அலுவலக இயக்குநராகப் பணியாற்றவுள்ளார்.
முதலில் நகந்தலாதான் சென்னையில் துணைத் தூதராக இருந்தார். அவரை மாற்றி விட்டுத்தான் அம்ஸா நியமிக்கப்பட்டார். தற்போது மறுபடியும் நகந்தலா இடத்திற்கு லண்டனுக்கு போகிறார் அம்ஸா என்பது குறிப்பிடத்தக்கது.
அம்ஸா, இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர். தமிழ் முஸ்லீம் என்பது குறிப்பிடத்தக்கது. விடுதலைப் புலிகள் இயக்க வட்டாரத்தில் அம்ஸா ஒரு இன துரோகியாக சித்தரிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்ஸாவுக்குப் பதில் புதிய துணைத் தூதராக இன்னொரு தமிழரான கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்படவுள்ளார். இவர் தற்போது வங்கதேசத்தில் துணைத் தூதராக உள்ளார்.
புலிகளுக்கு எதிரான விரிவான போரைத் திட்டமிட்ட உடனேயே தமிழர் ஒருவரை துணைத் தூதராக சென்னைக்கு அனுப்பிய இலங்கை அரசு தற்போது தமிழர்களுக்கு மறு வாழ்வு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் உலகம் முழுவதும் வலுத்து வரும் நிலையில், இன்னொரு தமிழரை துணைத் தூதராக்கியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தமிழர்களுக்கு உதவ வேண்டும்
இதற்கிடையே, இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள பாட்ரீசியா புடேனிஸ், இலங்கை அரசு தமிழர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.
இதுகுறித்து அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ் சிறுபான்மையினத்தவருக்கு இலங்கை அரசு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். இடம் பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியுள்ள லட்சக்கணக்கான தமிழ் மக்களுக்குத் தேவையானதை அந்த நாட்டு அரசு செய்ய வேண்டிய கடமையில் உள்ளது.
சட்டத்திற்குப் புறம்பாக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் குறித்து உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என இலங்கை அரசை நான் வலியுறுத்தப் போகிறேன்.
தற்போது இலங்கை அரசுக்கு பிரச்சினைகளைத் தீர்க்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை அந்த நாட்டு அரசு தவற விட்டு விடக் கூடாது என்பதே அமெரிக்காவின் செய்தி.
தமிழ் மக்களைப் புரிந்து கொண்டு அவர்களின் எதிர்கால வளமையான வாழ்வுக்கு இலங்கை அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். ஒருங்கிணைந்த இலங்கையில் தமிழ் மக்கள் சகலவிதமான உரிமைளுடனும், சம அந்தஸ்துடனும் வாழ வழி செய்ய வேண்டும்.
இடம் பெயர்ந்தோர் முகாம்களில் அனைத்து நிவாரணப் பணியாளர்களையும் தங்கு தடையின்றி இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என்றார் அவர்.