'டிபன் பாக்ஸ் பாம்': மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தீவிர பாதுகாப்பு-பட்டறைகளில் சோதனை
மதுரை: மதுரையில் டிபன் பாக்ஸ்களில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து போலீசார் அங்கு இருக்கும் வெள்ளி, பித்தளைப் பட்டறைகளில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பாதுகாப்பை பன்மடங்கு உயர்த்தியுள்ளனர்.
மதுரை விரகனூர் ரிங் ரோடு பாலம் அருகில் நேற்று முன்தினம் 15 டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகளை போலீசார் கண்டுபிடித்தனர். 20 அடி தூரத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்து சக்தி கொண்ட அந்த வெடிகுண்டுகளை போலீசார் டெட்டனேட்டரைப் பயன்படுத்தி வெடிக்க செய்தனர்.
ஹைதராபாத், பெங்களூர், மும்பை உள்ளிட்ட இடங்களில் இதேபோன்ற டிபன் பாக்ஸ் குண்டுகள் வெடித்துள்ளதால் மதுரையில் அவர்கள் இது போன்று கைவரிசை காட்ட முயன்று இருக்கலாம் என்றும், டிபன் பாக்ஸ் குண்டுகள் அதிக அளவில் சிக்கி இருப்பதால் அவர்கள் பெரும் சதித் திட்டத்துடன் மதுரைக்குள் ஊடுறுவியிருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக மதுரை கியூ பிராஞ்ச் மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து விசராணை மேற்கொண்டு வருகின்றனர்.
பயங்கர சதி திட்டம் தடுக்கப்பட்ட நிலையில் வெடிகுண்டுகளை தயாரித்த கும்பல் மதுரைக்குள் தான் இருக்க வேண்டும் என போலீசார் நம்புகின்றனர். இதை அடுத்து மதுரை சுற்று வட்டார பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைத்து உள்ளனர். முக்கியமான பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது முதல் கட்டமாக அவர்கள் டிபன் பாக்ஸ் மற்றும் வெடிகுண்டு தேவையான மூலப் பொருட்கள் எங்கு கிடைத்தது என்பதை கண்டறிய முயன்று வருகின்றனர். இதையடுத்து அவர்கள் ஜெய்ஹிந்துபுரம், ஒத்தக்கடை, கீரைத்துறை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கம் வெள்ளி பட்டறைகளில் விசாரித்தனர்.
குண்டுகள் வைக்கப்பட்டிருந்ததை போன்ற டிபன்பாக்ஸ்கள் எங்கும் தயாரிக்கப்படுகின்றன என அறிந்து கொண்ட போலீசார் அந்த பட்டறைகளில் சமீபத்தில் மொத்தமாக டிபன்பாக்ஸ் வாங்கி சென்றார்களா என விசாரித்தனர். ஆனால், வெடிகுண்டுகளை தயாரித்தவர்களை பற்றி எந்த துப்பும் துலங்கவில்லை.
இதை தொடர்ந்து ஒத்தக்கடை, மேலூர், செக்கானூரணி உள்ளிட்ட இடங்களில் உள்ல தனியார் வெடிமருந்து குடோன்களிலும் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதை தொடர்ந்து பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பாதுகாப்பை பன்மடங்கு அதிகரித்துள்ளனர். இந்த கோவில் ஏற்கனவே தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்டில் இருப்பதால் 24 மணி நேர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பக்தர்கள் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் சோதிக்கப்பட்ட பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
கோவிலை சுற்றிலும் கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மோப்ப நாய்களின் உதவியுடன் வெடிகுண்டு சோதனையும் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் இன்று சிறப்பு புலனாய்வு குழுவினர் மீனாட்சி கோவிலில் பாதுகாப்பு குறித்து ஆராய இருக்கின்றனர். மேலும் மதுரைக்கு அருகே இருக்கும் அழகர்கோவில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆகியவற்றுக்கும் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.