திமுக ஆட்சியில் மி்ன்துறை தனியார்மயமாகாது-ஆற்காடு
சென்னை: திமுக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்வரை மின் வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்க மாட்டோம் என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.
சட்டசபையில் இன்று எரிசக்தித் துறை மானிய கோரிக்கைகள் மீது நடந்த விவாதம் வருமாறு:
அதிமுக எம்எல்ஏ நத்தம் விஸ்வநாதன்:
திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டு முடிவடைந்தும் மின் உற்பத்தியில் எதையும் சாதிக்கவில்லை. புதிய மின் உற்பத்தி 203 மெகாவாட் தான். ஆனால் இதையெல்லாம் மறைக்க 5,000 மெகாவாட் கூடுதல் உற்பத்தி செய்ய தனியாருக்கு கொடுத்த அனுமதியையும் சேர்த்து சொல்லி இருக்கிறீர்கள்.
ரூ.100, ரூ.200 கொடுத்து மக்களை ஏமாற்றியது போல எம்எல்ஏக்களை ஏமாற்றியது எந்த வகையில் நியாயம்? என்றார்.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி (இடைமறித்து):
ரூ.100, ரூ.200 கொடுத்து மக்களை ஏமாற்றியதாகக் கூறினார். அதிமுக போல ரூ.500, ரூ.1000 கொடுத்து நாங்கள் ஏமாற்றவும் இல்லை. மக்களும் ஏமாந்தவர்கள் கிடையாது.
மின் உற்பத்தி குறித்து கொள்கை விளக்க குறிப்பில் முழு விவரமும் கொடுத்து உள்ளோம். முழுமையாக படிக்காமல் உறுப்பினர் பேசுகிறார்.
விஸ்வநாதன்: மின் வாரியத்தை பிரிக்க நீங்களும் எதிர்த்தீர்கள். நாங்களும் எதிர்த்தோம். ஆனால் மத்திய அரசு மின் வாரியத்தை மூன்றாகப் பிரிக்க வற்புறுத்துகிறது. இப்போது இதை நீங்கள் கொள்கைரீதியாக ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இந்த கொள்கை தடுமாற்றம் எப்படி வந்தது?.
இதை பார்க்கும்போது மின் வாரியத்தை மெல்ல, மெல்ல தனியாருக்கு தாரை வார்க்க நீங்கள் ஒத்துக் கொள்வதாக அர்த்தமாகிறது. மாநில சுயாட்சி கேட்டு முதல்வர் பேசும் இந்த சமயத்தில் மின் வாரியத்தை பிரிப்பதை நீங்கள் ஏன் தடுக்கவில்லை?.
ஆற்காடு வீராசாமி: இந்த ஆட்சி இருக்கும் வரை தனியாருக்கு மின் வாரியத்தை தாரை வார்க்க மாட்டோம்.
விஸ்வநாதன்:- தமிழ்நாட்டில் பல இடங்களில் மின் வெட்டு உள்ளது. மின் வெட்டு அறிவிக்கப்படாத சென்னை நகரத்தில் கூட மின் தடை ஏற்படுகிறது. இதற்கு இந்த அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். மின் வாரியத்தில் புரட்சி தலைவி ஆட்சிதான் தமிழ்நாட்டில் பொற்காலமாக இருந்தது.
நீங்கள் சொல்வதை கேட்கும் ஆட்சியாக இதற்கு முன்பு மத்திய அரசு இருந்தது. இப்போது அவர்கள் சொல்வதை நீங்கள் கேட்கும் ஆட்சியாகிவிட்டது. இந் நிலையில் மத்திய தொகுப்பில் இருந்து எப்படி மின்சாரம் பெறப் போகிறீர்கள்?.
தமிழ்நாட்டில் 18,140 மெகாவாட் அளவுக்கு புதிய மின் உற்பத்திக்கு 10 தனியார் திட்டங்களுக்கு இந்த அரசு அனுமதி அளித்தது. இதில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. எதுவுமே நடக்கவில்லை. இந்த ஆட்சி வெறும் அறிவிப்பு ஆட்சியாக இருக்காமல் செயல்படும் ஆட்சியாக இருக்க வேண்டும் என்றார்.