ஜி20 முடிவுகளை நடைமுறை படுத்துங்கள்-மன்மோகன்
யகடரின்பர்க்: பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள லண்டன் ஜி20 நாடுகள் உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என பிரிக் உச்சி மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
ரஷ்யாவில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் முதலில் ஷாங்காய் கூட்டமைப்பு நாடுகளின் கூட்டத்தில் பேசிய அவர், பாகிஸ்தான் அதிபர் சர்தாரியுடன் பேசினார்.
இதை தொடர்ந்து அவர் பிரிக் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் பிரதமருடன் மற்ற உறுப்பு நாடுகளான ரஷ்ய அதிபர் டிமிட்ரி மேத்விதவ், சீன அதிபர் ஹூ ஜின்டா, பிரேசில் அதிபர் லூயிஸ் இன்சியோ டா சில்வா ஆகியோரும் பங்கேற்றனர்.
அப்போது கூட்டத்தில் மன்மோகன் சிங் பேசுகையில்,
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க லண்டனில் நடந்த ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை பின்பற்ற வேண்டும். இந்த முடிவுகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய நான்கு நாடுகளை சேர்ந்த தொழிலதிபர்களின் அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.
இது தொடர்பாக நான்கு நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் அந்த நாட்டு மத்திய வங்கிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று எந்த மாதிரியான விஷயங்களுக்கு நாம் அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும் என்றார்.
மாநாட்டை முடித்துக் கொண்ட மன்மோகன் சிங் இன்று ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்குப் புறப்பட்டார்.