நக்சல் வேட்டை-'ஆக்சனில்' துணை ராணுவம்!
மேற்கு மிதினாப்பூர் மாவட்டத்தில் புகுந்து கொண்டுள்ள மாவோ நக்சலைட்டுகள் பெரும் அட்டூழியம் செய்து வருகின்றனர். லால்கர் நகரை அவர்கள் பிடித்து விட்டனர். அங்குள்ள போலீஸாரை விரட்டியடித்து விட்டனர். மார்க்சிஸ்ட் கட்சியினரையும் படுகொலை செய்து வருகின்றனர்.
முதல்வர் புத்ததேவ் பட்டசாரியாவையும் அவர்கள் குறி வைத்துள்ளனர். லால்கர் மட்டுமல்லாமல் அருகில் உள்ள பகுதிகளையும் அவர்கள் ஆக்கிரமித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாவோ அட்டகாசத்தை ஒடுக்க துணை ராணுவப்படையினரை அனுப்புமாறு மேற்கு வங்க மாநில அரசு கோரியது. இதையடுத்து மேற்கு மிதினாப்பூருக்கு துணை ராணுவம் விரைந்தது.
இந்த வீரர்கள் இன்று காலை முதல் மாவோயிஸ்டுகளுக்கான எதிரான தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக மாநில டிஜிபி சுஜித் குமார் சர்க்கார் தெரிவித்துள்ளார்.
விரைவில் மாவோயிஸ்டுகள் ஒடுக்கப்பட்டு சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் வரும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நக்ஸல்கள் கட்டுப்பாட்டில் உள்ள அம் மாவட்டத்தின் 50 கிராமங்களும் துணை ராணுவத்தினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில் இந்த கிராமங்களுக்குள் போலீசோ துணை ராணுவமோ நுழைந்தால் ரத்த ஆறு ஓடும், நாடே தீப்பற்றி எரியும் என மாவோயிஸ்டுகள் எச்சரித்துள்ளனர்.
மேற்கு வங்கத்தை சாடும் மத்திய அரசு..
இதற்கிடையே, நக்சலைட் அட்டகாசத்தை ஒடுக்கும் வேலை மேற்கு வங்க மாநில அரசுடையது. அதிலிருந்து அது தப்ப முயலக் கூடாது என மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இதுகுறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், புத்ததேவ் அரசுதான் இதைக் கையாள வேண்டும். நக்சலைட்டுகளை ஒடுக்க வேண்டியது மாநில அரசின் கடமையாகும்.
லால்கரில் நிலைமை மோசமடைந்து வருகிறது. ஒருபக்கம் மாநில அரசு நடவடிக்கை எடுக்க விரும்புகிறது. ஆனால் அதன் விளைவுகளை நினைத்து பயப்படுகிறது. இதில் எந்த முடிவு சிறந்தது என்பதை தீர்மானிக்க வேண்டியது முதல்வரின் கடமையாகும் என்று கூறியுள்ளார் சிதம்பரம்.
இதற்கிடையே, லால்கர் விவகாரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திரினமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி முயன்று வருகிறார். மேற்கு வங்க மாநில அரசின் திறமையற்ற நிர்வாகமே இந்தப் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கக் காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் மேற்கு வங்க மாநில அரசு மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மமதா வலியுறுத்தியுள்ளார்.
மொத்தத்தில் லால்கர் விவகாரம் தற்போது மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான சண்டையாக மாறி வருகிறது.