கொள்ளையர்களை 'சேஸ்' செய்து சுட்டு பிடித்த போலீ்ஸ்
சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர்.
இவருக்கு சென்னையில் 2 ஹோட்டல்கள் உள்ளன. ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.
விழுப்புரம்- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் கேனிப்பட்டு என்ற இடத்தில் புதிய ஹோட்டல் கட்டி முடித்துள்ளார். அங்கு தங்குவதற்காக வீடுகளும் கட்டியுள்ளார்.
அதில் ஒரு வீட்டில் குடும்பத்தினருடன் தங்கியிருந்தார். நேற்றிரவு அப்துல் காதர், மனைவி பாத்திமா, மகன் முகமது ரியாஸ், மகள் கதீஜா, மருமகள் சுமியா, பேரன் ஆரிப் ஆகியோர் வீட்டில் இருந்தனர்.
அப்போது 5 பேர் கொண்ட கும்பல் வீச்சரிவாள்கள், கத்திகள், தடிகளுடன் வீட்டுக்குள் புகுந்தது. அவர்களை தடுக்க முயன்ற அப்துல் காதரை அக் கும்பல் பயங்கரமாக தாக்கியது.
பின்னர் நகைகள், பணத்தைத் தந்தால் போய் விடுவோம் என மிரட்டினர். இதையடுத்து வீட்டில் இருந்த 30 பவுன் நகை, பணம், 6 செல்போன்கள், 6 ஏ.டி.எம். கார்டுகள் ஆகியவற்றை கொள்ளையடித்த அர் கும்பல் அனைவரையும் ஒரு அறைக்குள் அடைத்து பூட்டிவிட்டு, அப்துல் காதரின் காரை எடுத்துக் கொண்டு தப்பியது.
கதவை உடைத்துக் கொண்டு வெளியே வந்த அப்துல் காதர், திண்டிவனத்தை சேர்ந்த நண்பர் வேங்கிடபதிக்கு தொலைபேசி மூலம் தகவல் தந்தார்.
அவர் உடனே விழுப்புரம் எஸ்பி அமல்ராஜுக்கு தகவல் தந்தார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
கொள்ளையர்கள் தப்பிய காரின் எண் போலீசாருக்கு தரப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இந் நிலையில் காலை 6 மணியளவில் உளுந்தூர்பேட்டை டோல்கேட் அந்தக் கார் வந்தது. அதை போலீசார் தடுத்தனர்.
ஆனால், காரை நிறுத்தாமல் கொள்ளையர்கள் தப்பினர். காரை போலீசார் ஜீப்பில் விரட்டிச் சென்று சேலம் ரோட்டில் வைத்து மடக்க முயன்றனர். ஆனால், போலீஸ் டிரைவர் கண்ணனை தடியால் தாக்கிவிட்டு அந்தக் கும்பல் தப்பியது.
பின்னால் இன்னொரு ஜீப்பில் வந்த டி.எஸ்.பி. செல்வஅரசு, எஸ்கள் சோம சுந்தரம், அப்துல் சுலைமான் மற்றும் போலீசார் காரை துரத்தி சென்றனர்.
சுடுகாடு அருகே காரை நிறுத்திய அக் கும்பல் அதிலிருந்து இறங்கி தப்பியோடியது.
இதையடுத்து அந்தக் கும்பல் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 2 கொள்ளையர்களின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அவர்கள் கீழே சரிந்தனர். மற்ற மூவரும் தப்பியோடிவிட்டனர்.
துப்பாக்கி குண்டு பாய்ந்து விழுந்த 2 கொள்ளையர்களும் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவனது பெயர் செல்வம். சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவன்.
இன்னொருவன் மோகன்ராஜ். விழுப்புரம் மாவட்டம் வானூரைச் சேர்ந்தவன்.
இந்த இருவரும் உளுந்தூர்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தப்பியோடிய கொள்ளையர்கள் சேலம் சின்னப்பன்பட்டியை சேர்ந்த சக்தி, சந்துரு, சேகர் என்று தெரியவந்துள்ளது. அவர்களைப் பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர்.
காரில் இருந்த 2 வீச்சரிவாள்கள், கத்திகள், 3 நாட்டு வெடி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. நகை, பணம் தப்பியோடிய கொள்ளையர்களிடம் சிக்கியுள்ளது.
இது குறித்து மாவட்ட எஸ்பி அமல்ராஜ் கூறுகையில், இதுபோன்ற கொள்ளையர்களை துப்பாக்கியால் சுட தயங்கவே மாட்டோம். தப்பியோடியவர்கள் உடனே சரணடைய வேண்டும். அவர்களையும் சுட்டுப் பிடிக்க தயங்க மாட்டோம் என்று எச்சரித்துள்ளார்.