கள்ளக்காதலன் கொலைக்கு பின் திருந்திய பெண்!
சென்னை: கணவர் பலமுறை எடுத்துக் கூறியும் கள்ளக்காதலனை விடாத பெண், கள்ளக்காதலனை தனது கணவர் இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற பின்னர் தனது செயலை நினைத்து வருந்தி அழுது, கணவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறு போலீஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை வண்ணாரப்பேட்டை வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் அருண்குமார். இவர் ஒரு கூலி தொழிலாளி. சரண்யா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளது.
அருண் குமாரின் நண்பர் பாலாஜி. இவர் அடிக்கடி அருண் குமார் வீட்டுக்கு வருவார். அப்போது பாலாஜிக்கும், அருண் குமாரின் மனைவிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டு விட்டது.
இது அருண்குமாருக்குத் தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்தார். பாலாஜியுடனான நட்பைத் துண்டித்தார். மேலும் மனைவியையும் கண்டித்துள்ளார். ஆனாலும் காமவெறி கண்ணை மறைக்கவே சரண்யா கணவரின் அறிவுரையை கண்டுகொள்ளாமல் தனது வேலையை தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் பாலாஜி, சரண்யா வீட்டுக்கு அருகில் உள்ள சந்துக்கு வந்துள்ளார். அங்கு சரண்யாவும் வந்துள்ளார். அங்கு வைத்து இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதை நேரில் பார்த்து விட்டார் அருண்குமார். ஆத்திரம் தலைக்கேற அருகில் கிடந்த இரும்புக் கம்பியை எடுத்து பாலாஜியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பாலாஜி இறந்து போனார். கணவரின் கொடூரக் கோபத்தைப் பார்த்து பயந்து போன சரண்யா அங்கிருந்து ஓடி விட்டார்.
வண்ணாரப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து அருண்குமாரைக் கைது செய்தனர். சரண்யா எங்கிருக்கிறார் என்று தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வந்து சரணடைந்தார் சரண்யா.
கண்ணீரும் கம்பலையுமாக தனது தகாத செயலால்தான் இவ்வளவும் நேரிட்டு விட்டது என்று அழுது புலம்பினார்.
அவர் போலீஸாரிடம் கூறுகையில், நானும் எனது கணவரும் மகிழ்ச்சியாகத்தான் வாழ்ந்து வந்தோம். எனது குழந்தை நிவேதாவை அவர் உயிராக நேசித்தார். என்னை எந்தவித கொடுமையும் படுத்த மாட்டார். சுதந்திரமாக வைத்திருந்தார்.
அவரது நண்பர் பாலாஜியை அடிக்கடி வீட்டுக்கு அழைத்து வருவார். அவருடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டு விட்டது. எனது கணவர் இல்லாத சமயம் பார்த்து பாலாஜி வீட்டுக்கு வருவார். இருவரும் உல்லாசமாக இருப்போம்.
இது எனது கணவருக்குத் தெரிந்து விட்டது. என்னைக் கண்டித்தார். பாலாஜியுடன் இருந்த நட்பையும் துண்டித்துக் கொண்டார்.
ஆனாலும் என்னால் பாலாஜியை விட முடியவில்லை. அவரை நள்ளிரவில் வீட்டுக்கு அருகில் வரச்சொன்னேன். அவரும் வந்தார். இருவரும் உல்லாசமாக இருப்பதை பார்த்ததால் என் கணவர் இரும்பு கம்பியால் பாலாஜியை பலமாக அடித்தார். என்னையும் அடிக்க ஓடி வந்தார். நான் தப்பி விட்டேன்.
காம ஆசை என் கண்ணை மறைத்து விட்டது. கணவருக்கு துரோகம் செய்ததை எண்ணி இப்போது வருத்தப்படுகிறேன். என் பாவத்தை கடவுள் கூட மன்னிக்க மாட்டார்.
என்னை கணவர் மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நானும், குழந்தையும் அனாதையாகி விடுவோம் என்று கூறியுள்ளார் சரண்யா.