பழங்குடி கிராமங்களில் நக்ஸல் முற்றுகை தொடர்கிறது..திணறும் ராணுவம்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் லால்கர் மாவட்டத்தில் பழங்குடியினர் துணையுடன் 50 கிராமங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள நக்ஸல்களை துணை ராணுவப் படையினரும் மேற்கு வங்க போலீசாரும் தொடர்ந்து முற்றுகையிட்டு தாக்கி வருகின்றனர்.
இரு தரப்புக்கும் இடையே கடந்த 4 நாட்களாக துப்பாக்கிச் சண்டை நடந்து வரும் நிலையில் இதுவரை 600 மாவோயிஸ்ட் நக்சல்கள் போலீசாரிடம் சரணடைந்துள்ளனர்.
இந்த கிராமங்களில் இரவு பகலாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர் வீடு வீடாக சோதனைகள் நடத்தி வருகின்றனர். சந்தேகத்துக்கிடமான நூற்றுக்கணக்கான பழங்குடியினரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
பல இடங்களில் ராணுவத்தையும் போலீசாரையும் தடுக்க மரங்களை வெட்டிப் போட்டு தடைகளை ஏற்படுத்தியுள்ள பழங்குடியினர், தங்களை மனித அரண்களாக முன் நிறுத்தி நக்ஸல்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
போலீசாரைத் தடுக்கும் பழங்குடியினரை துணை ராணுவப் படையினரும் போலீசாரும் அடித்து, உதைத்து வருகின்றனர். இதில் பலர் காயமடைந்துள்ளனர்.
மாவோயிஸ்டுகளுக்கு உதவ வேண்டாம் என்ற கோரிக்கைகள் அடங்கிய நோட்டீஸ்களை துணை ராணுவப் படையினர் ஹெலிகாப்டர்கள் மூலம் இந்த கிராமப் பகுதிகளில் வீசி வருகின்றனர்.
பொது மக்களுக்கு உயிருக்கு சேதம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு மேற்கு வங்க முதல்வர் புத்ததேவும், துணை ராணுவப் படையினருக்கு மத்திய அரசும் உத்தரவிட்டுள்ளதால் அவர்கள் இன்னும் முழு வேகத்தில் நடவடிக்கையில் ஈடுபடவில்லை.
இந் நிலையில் பிரதமர் மன்மோகன் சிங், புத்ததேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமை குறித்து கேட்டறிந்தார்.
இதற்கிடையே ஓட்டுக்காக இந்தப் போராட்டதையே மத்திய ரயில்வே அமைச்சரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தான் பின்னால் இருந்து தூண்டுவிட்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
அதே நேரத்தில், மம்தா எங்கள் பக்கம் இருக்கிறாரா அல்லது மத்திய, மாநில அரசுகள் பக்கம் இருக்கிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என மூத்த மாவோயிஸ்ட் தலைவர்களின் ஒருவரான கோடேஸ்வர் ராவ் கூறியுள்ளார்.
இந் நிலையில் துணை ராணுவப் படையினரை எதி்ர்கொள்ள ஆந்திரா, சட்டீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து ஏராளமான நக்ஸல்கள் மேற்கு வங்கத்துக்குள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்து வருவதாக மத்திய உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது.