கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நடிகை ஆசினின் உதவியாளர் முத்துக்குமார் கைது
சென்னை: நடிகை ஆசினால் சித்திரவதை செய்யப்பட்டதாகவும், அவரது குடும்பத்தினரால் கடத்தப்பட்டு விட்டதாகவும் கூறப்பட்ட ஆசினின் உதவியாளர் நல்லமுத்துக்குமார் சென்னை அருகே கைது செய்யப்பட்டார்.ஆசினிடம் டச் அப் உதவியாளராக இருந்தவர் நல்லமுத்துக்குமார். இவர் ஆசின் மும்பைக்கு இடம் பெயர்ந்தவுடன் அவருடன் சென்று பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் முத்துக்குமாரின் தாயார் சென்னை புறநகர் போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில், எனது மகன் நல்லமுத்துக்குமார் குறித்த தகவல் இல்லை. அவரை ஆசின் குடும்பத்தினர் கடத்தி வைத்து சித்திரவதை செய்து வருவதாக அறிகிறேன்.
எனது மகனை மீட்டுத் தர வேண்டும் என கோரியிருந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து போலீஸார் ஆசின் தரப்பில் விசாரித்தனர். அப்போது தாங்கள் ஏற்கனவே முத்துக்குமாரை வேலையை விட்டு நீக்கி விட்டதாகவும், இப்போது அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து தெரியாது என்றும் கூறியிருந்தனர்.
இதையடுத்து முத்துக்குமாரை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் அவர் குறித்து ஒரு துப்பும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் சென்னை அருகே சோழவரம் பகுதியில் பதுங்கியிருந்த முத்துக்குமாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவரை திருவள்ளூர் எஸ்.பி. அலுவலகத்திற்குக் கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பின்னரே என்ன நடந்தது என்பது தெரிய வரும்.