தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு மெடிக்கல் கவுன்சில் தடை
இதுதொடர்பான அறிவிப்பை இந்திய மருத்துவக் கவுன்சில் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது கவுன்சில். இதன் காரணமாக குறைந்தது 100 சீட்கள் தமிழகத்தில் இந்த ஆண்டு குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் கடந்த ஆண்டு சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு மருத்துவ கவுன்சில் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து மருத்துவக் கல்வித்துறை இயக்குநர் டாக்டர் விநாயகம் கூறுகையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் கவுன்சில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது 15 குறைபாடுகள் இருப்பதாக தெரிவித்தனர். அவற்றில் முக்கியமானது கட்டட பற்றாக்குறை.
மேலும், நூலகத்தில் போதிய நூல்கள் இல்லை எனவும் தெரிவித்தனர். இவற்றை முடிந்த அளவுக்கு நிவர்த்தி செய்து விட்டோம்.
பின்னர் 2வது முறையாக ஆய்வுக்கு வந்தனர். இந்த நிலையில், இப்போது மாணவர் சேர்க்கைக்கு அனுமதி இல்லை என்று அவர்கள் தெரிவித்திருப்பதற்கான காரணம் புரியவில்லை.
மேலும், மருத்துவக் கவுன்சிலிடமிருந்து இதுவரை எங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை. அவர்களது இணையதளத்தைப் பார்த்துதான் நாங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், நான் திங்கள்கிழமை டெல்லி செல்கிறேன். அங்கு சுகாதாரத் துறை அதிகாரிகளை சந்தித்து ஆலோசிக்கவுள்ளேன் என்றார்.
தற்போது தமிழகத்தில் மொத்தம் 15 அரசு மருத்துவக் கல்லூரிகள் (தர்மபுரியையும் சேர்த்து) உள்ளன. மொத்தம் 1483 மருத்துவ இடங்கள் உள்ளன. மருத்துவக் கவுன்சில் தனது முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால் சீட்களின் எண்ணிக்கை 1383 ஆக குறைந்து விடும்.