சிவகங்கை தோல்வி - நீதிமன்றம் செல்ல ராஜகண்ணப்பன் முடிவு
காரைக்குடி: சிவகங்கை தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை முறைகேடுகளுக்கு எதிராக உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்படும் என அ.தி.மு.க. வேட்பாளர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் அ.தி.மு.க., சார்பில் நன்றி அறிவிப்பு கூட்டம் மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பேசியதாவது..
மக்களவைத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.,கூட்டணிக்கு 40 தொகுதிகளிலும் வெற்றி அலை வீசியது.
மக்களின் அறியாமை, ஏழ்மையை பயன்படுத்தி, பணம் கொடுத்தும், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சதி செய்தும், அதிகாரிகளின் பலம், பணபலம் ஆகியவற்றை பயன்படுத்தி தி.மு.க கூட்டணியினர் வெற்றி பெற்றுள்ளனர்.
சிவகங்கையில் ப.சிதம்பரத்தை தோற்கடிக்க வேண்டும், என்ற அம்மாவின் உத்தரவை நிறைவேற்ற முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு.
எங்களுக்கு சுப்ரீம் கோர்ட் என்பது அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான், அவரே செயற்குழு கூட்டத்தில் சிவகங்கையில் ராஜகண்ணப்பன் வெற்றி பெற்றதாக கூறிவிட்டார். அவரே தீர்ப்பு வழங்கி விட்டதால், அது பற்றி எனக்கு கவலை இல்லை.
சிவகங்கை தொகுதியில் ஓட்டு எண்ணிக்கையில் நடந்த முறைகேடுகளை வெளியில் கொண்டு வர ஜூன் 23 -ம் தேதி ஐகோர்ட்டில் வழக்கு தொடர உள்ளோம். நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.