மன்மோகனை மறுபடியும் சந்திக்க தயங்கும் சர்தாரி
இஸ்லாமாபாத்: ரஷ்யாவில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசியபோது, தீவிரவாதத்தை உடனடியாக கட்டுப்படுத்துங்கள் என்று ஏகப்பட்ட செய்தியாளர்களை வைத்துக் கொண்டு பட்டென்று பிரதமர் மன்மோகன் சிங் பேசியதால் வெடவெடத்துப் போன பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, எகிப்தில் நடைபெறவுள்ள மாநாட்டில் மீண்டும் சிங்கை சந்திக்க யோசித்து பிரதமரை அனுப்ப திட்டமிட்டுள்ளார்.
ரஷ்யாவின் யேடகரின்பர்க் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் சிங்கும், சர்தாரியும் சிறப்புப் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.
அப்போது சர்தாரியும், சிங்கும் சந்தித்துக் கொண்டனர். மன்மோகன் சிங்கிடம் சர்தாரி கை குலுக்கினார். இதை ஏகப்பட்ட புகைப்படக்காரர்கள் போட்டி போட்டுக் கொண்டு படம் எடுத்தனர். சர்வதேச நாடுகளின் செய்தியாளர்களும் அருகில் இருந்தனர்.
சர்தாரி புன்னகையுடன் மன்மோகன் சிங்கிடம் கை குலுக்க, மாறாக பிரமதரோ, சற்று இறுக்கமாக முகத்தை வைத்துக் கொண்டு, பாகிஸ்தான் மண்ணில் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளின் செயல்பாட்டை தடுத்து நிறுத்துங்கள் என்று பட்டென்று கூற சலசலத்துப் போனார் சர்தாரி.
நிருபர்களை வைத்துக் கொண்டு இதை பேச வேண்டாமே என்று கூறி பின்னர் மன்மோகன் சிங்கை அங்கிருந்து அவர் அழைத்துச் சென்று நிலைமையை சமாளித்தார்.
மன்மோகன் சிங்கின் பேச்சும், அதை எதிர்கொள்ள முடியாமல் திணறிப் போன சர்தாரியின் செயலும், பாகிஸ்தானில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மன்மோகன் சிங் பேசியதை ஏற்க முடியாது என பாகிஸ்தான் அரசு கருத்து தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், எகிப்து நாட்டில், அணி சேரா நாடுகள் அமைப்பின் உச்சி மாநாடு அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்கிறார். அதேபோல சர்தாரியும் கலந்து கொள்வார் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது தனது முடிவை சர்தாரி மாற்றிக் கொண்டு விட்டார். தனக்குப் பதிலாக பிரதமர் கிலானியை அவர் அனுப்பவுள்ளார். மன்மோகன் சிங்கை மறுபடியும் சந்திக்கத் தயங்கியே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ரஷ்ய பயணத்தின்போது, மீண்டும் எகிப்து மாநாட்டில் சர்தாரியுடன் நான் பேசுவேன் என்று கூறியிருந்தார் மன்மோகன் சிங். இதனால்தான் சிங்கை சந்திக்கப் பயந்து கொண்டு கிலானியை அனுப்ப முடிவு செய்துள்ளார் சர்தாரி என்று பேச்சு எழுந்துள்ளது.