மாவோயிஸ்டுகளிடமிருந்து மீட்க லால்கர் நகருக்குள் துணை ராணுவம் நுழைந்தது
நக்சலைட்டுகளின் பிடியில் உள்ள லால்கர் நகர காவல் நிலையத்தை நோக்கி துணை ராணுவப்படையினரும், போலீஸாரும் முன்னேறி வருகின்றனர். இன்னும் 2 கிலோமீட்டர் தூரத்தில்தான் காவல் நிலையம் உள்ளது.
சிஆர்பிஎப், எல்லைப் பாதுகாப்புப் படை, மாநில ஆயுதப் போலீஸ், கிழக்கு எல்லைப்புற துப்பாக்கிப் படை, கொல்கத்தா போலீஸார் இந்த படையில் இடம் பெற்றுள்ளனர்.
கவச வாகனங்களில், முன்னேறி வரும் துணை ராணுவப் படையினர், பல்வேறு வகையான ஆயுதங்களையும் கையோடு கொண்டு சென்றிருக்கின்றனர்.
ராணுவம் கிடையாது - அந்தோணி
இதற்கிடையே, நக்சலைட்டுகளை ஒடுக்க ராணுவத்தை அனுப்பும் திட்டம் இல்லை என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மாநில போலீஸாருக்கும், துணை ராணுவப் படையினருக்கும் ஆலோசனைகள் உள்ளிட்ட உதவிகளைத்தான் ராணுவம் தர முடியும். நேரடியாக அவர்களை மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடான சண்டையில் ஈடுபடுத்தும் சாத்தியம் இல்லை.
லால்கர் நக்சலைட் பிரச்சினை ஒட்டுமொத்த நாட்டுக்கும் மிகப் பெரும் கவலையாக மாறியுள்ளது. மாநில போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் இந்த சவாலை சந்திப்பார்கள் என நம்புகிறோம் என்றார் அவர்.
நக்சலைட்டுகளுடன் படையினர் கடும் போராட்டம்..
இதற்கிடையே லால்கர் பகுதியில் நிலைமை மேலும் மோசமாகி வருகிறது. நிலவெடி தாக்குதல், துப்பாக்கிச் சூடு மூலம் துணை ராணுவப்படையினரையும், போலீஸாரையும் அச்சுறுத்தி வருகின்றனர் மாவோயிஸ்டுகள்.
நேற்று மாலை பிரகதா பஜார் பகுதியில், போலீஸ் ஜீ்ப்பை நக்சலைட்டுகள் நிலவெடி வைத்துத் தகர்த்தனர். இதில் 2 போலீஸார் காயமடைந்தனர்.
இந்த நிலையில், பாதுகாப்புப் படையினர் தற்போது லால்கரிலிருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளனர். லால்கர் மட்டுமல்லாது அதைச் சுற்றிலும் உள்ள 50 கிராமங்களில் நக்சலைட்கள் புகுந்துள்ளதால் பாதுகாப்புப் படையினரின் பணி கடும் சவாலாக மாறியுள்ளது.
கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்கும் கருவிகள், வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் கருவிகளின் உதவியுடன் பாதுகாப்புப் படையினர் முன்னேறி வருகின்றனர். மேலும், கிராமங்களில் புகுந்து வீடு வீடாகவும் சோதனை போடப்பட்டு வருகிறது.
நக்சல் தலைவர் தப்பினார்...
மாவோயிஸ்ட் நக்சலைட்டுகளை இயக்கி வருவது கோடீஸ்வர் ராவ் என்ற மாவோ தலைவர் எனத் தெரிய வந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு வரை இவர் லால்கரில்தான் தங்கியிருந்துள்ளார். ஆனால் தற்போது அவரும், அவரது அமைப்பின் முன்னணித் தலைவர்கள் சிலரும் தப்பி விட்டதாக தெரிகிறது.
கோடீஸ்வர் ராவ் சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்பின் பொலிட்பீரோ உறுப்பினர் ஆவார். இவருக்கு கிஷன்ஜி, முரளி, பிமல், பிரகலாத், ராம்ஜி, பிரதீப், ஸ்ரீதா என்று பல பெயர்கள் உள்ளனவாம்.
மேற்கு வங்கம், ஒரிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் நக்சல் வேலைகளைச் செய்யும் பொறுப்பு இவரிடம்தான் உள்ளது. முன்பு கொல்கத்தாவில்தான் வசித்து வந்தார் ராவ். அங்கிருந்தபடி லால்கர், பலுபானி, சல்பானி, பேல்பகாரி ஆகிய இடங்களுக்கு அடிக்கடி சென்று ஆதரவு திரட்டி வந்துள்ளார் என்று போலீஸார் தெரிவிக்கின்றனர்.