ஆசனவாயில் காற்றடித்து விளையாட்டு - வாலிபர் பலி
திருப்பூர்: மூன்று இளைஞர்கள், இயந்திரங்களை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும் காற்றடிக்கும் கருவியைக் கொண்டு ஆசனவாயில் காற்றடித்து விளையாடியதில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பூர் குப்பாண்டம்பாளையத்திலுள்ள ஒரு தனியார் பனியன் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் மாரியப்பன். 19 வயதான இவர் திருவாரூர் மாவட்டம் திருவரங்கநல்லூரை சேர்ந்தவர்.
இவருடன் குரு, பாக்கியராஜ் ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று இரவுப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதிகாலையில் டீ அருந்தும் நேரத்தில் இவர்கள் விபரீத விளையாட்டில் இறங்கியுள்ளனர்.
இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் காற்றடிக்கும் பைப்பை எடுத்து ஒருவர் மீது ஒருவர் காற்றடித்து விளையாடியுள்ளனர்.
அப்போது மாரியப்பனை கீழே படுக்க வைத்த மற்ற இருவரும் அவரது ஆசனவாயில் காற்றடித்துள்ளனர். காற்று படு வேகமாக வந்ததால் வயிறு வீங்கிய மாரியப்பன் அப்படியே மயக்கம் போட்டு விழுந்தார்.
அதிர்ச்சி அடைந்த குருவும், பாக்கியராஜும் அலறவே வேலை பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்கள் ஓடி வந்தனர். அனைவரும் சேர்ந்து மாரியப்பனை திருப்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் இல்லாமல் மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார்.
அதிக அழுத்தத்தில் காற்று மாரியப்பனின் உடலுக்குள் போனதால், மரணம் ஏற்பட்டுள்ளது. காற்று அதி வேகமாகவும், அதிக அழுத்தத்திலும் உடலுக்குள் போனதால் நுரையீரல் உள்ளிட்ட உடல் பாகங்கள் உடைந்து போயிருக்கும் எனவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.