சின்னசேலம் அருகே தாசில்தாரை மிரட்டி மர்ம நபர்கள் வழிப்பறி!
சின்னசேலம்: சின்னசேலம் அருகே தாசில்தாரை மிரட்டி வழிப்பறி செய்த நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் கும்மிடிப்பூண்டியில் தாசில்தாராக பணியாற்றி வருகின்றார்.
நண்பர்கள் வீரபாண்டியன், பாலாஜி ஆகியோருடன் கோவை சென்று விட்டு காரில் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் அருகே காரை நிறுத்தி இருந்தனர்.
அப்போது, அங்கு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் தாசில்தார் மகாலிங்கம் உள்பட 2 பேரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர்களிடம் இருந்த 1 பவுன் மோதிரம், 2500 ரொக்கப்பணம்
ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து தாசில்தார் மகாலிங்கம் சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.