உட்கட்சிப் பூசலால் பாதிப்பு - மென்மையான இந்துத்வாவை கடைப்பிடிப்போம்: அத்வானி
2 நாள் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் இன்றுடன் டெல்லியில் முடிவடைந்தது.
இன்றைய கூட்டத்தில், அத்வானி பேசினார். அப்போது உட்கட்சிப் பூசலால் கட்சிக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும், இந்துத்வாவை பாஜக தொடர்ந்து கடைப்பிடிக்கும். ஆனால் அதில் தீவிரமான போக்கைக் கடைப்பிடிக்காமல் மென்மையான அணுகுமுறை இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர்களி்ல் ஒருவரான வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் கூறுகையில், அத்வானி பேசுகையில், இது ஒரு பெரும் தோல்வி அல்ல. நாம் மீண்டும் மக்களிடம் போக வேண்டும்.
கட்சியில் நிலவும் பூசலால் கட்சித் தொண்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவும் தோல்விக்கு ஒரு காரணம்.
தேர்தல் முடிவு பாஜக எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பது உண்மைதான். அதேசமயம், நாடு இரு கட்சி முறையை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதை இந்தத் தேர்தல் நிரூபித்துள்ளது.
நாங்கள் தோல்வி அடைந்துள்ளோம் என்பதை ஒப்புக் கொள்கிறோம். அதேசமயம், மீண்டும் எழுந்து வரும் திறமையும், தகுதியும் பாஜகவுக்கு உள்ளது.
கட்சித் தலைவர்கள் சிலர் தொடர்ந்து மீடியாக்களில் தெரிவித்து வரும் கருத்துக்களால் கட்சித் தொண்டர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தேர்தல் தோல்விக்கு யாரையும் குறிப்பிட்டு குறை சொல்ல முடியாது. ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக பாஜக செயல்படும்.
சிலருக்கு நமது தோல்வி மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஆனால் புள்ளிவிவரங்களைப் பார்த்தால் நாம் இன்னும் பலமாகவே இருக்கிறோம் என்பது தெரியும் என்றார்.
முஸ்லீம்களே வேண்டாம் - மேனகா
இன்றைய கூட்டத்திலும் மேனகா காந்தி சலசலப்பை ஏற்படுத்தினார். நேற்று தனது மகனை பலிகடாவாக்கக் கூடாது என்று கூறிய அவர் இன்று முஸ்லீம்கள்தான் நமக்கு வாக்களிக்கவே மாட்டேன் என்கிறார்களே, பிறகு எதற்காக நாம் அவர்கள் பற்றிக் கவலைப்பட வேண்டும் என்று கேட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையடுத்து அவருக்கும், முக்தார் அப்பாஸ் நக்விக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும், ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் செளகான், பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, மகாராஷ்டிர பாஜக தலைவர் கோபிநாத் முண்டே ஆகியோரும் மேனகாவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.