4 பெண்களை மணந்து மோசடி- ஆந்திர டாக்டருக்கு வலைவீச்சு
தாராபுரம்: நான்கு பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய மோசடி டாக்டரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆந்திரா மாநிலம், காக்கிநாடாவை சேர்ந்தவர் டாக்டர் கோபால கிருஷ்ணன் (45). கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆந்திராவில் தனியாக மருத்துவமனை வைத்து நடத்தி வந்தார்.
இந்நிலையில் அவருக்கும், ஷீபா என்பவருக்கும் 20 ஆண்டுகளுக்கு முன்பாக 1989ல் பெற்றோர்களால நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடத்தப்பட்டது. இந்த திருமணம் வெறும் 5 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஷீபா கடந்த 1994ல் விவாகரத்து பெற்றுவிட்டார்.
இதையடுத்து டாக்டர் கோபால கிருஷ்ணன், விஜயலட்சுமி என்ற வக்கீலை 1994ல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது டாக்டர் கோபால கிருஷ்ணனுக்கு ரூ. 2 லட்சம், 10 பவுன் நகை, 1 ஏக்கர் நிலம் மற்றும் சீர்வரிசை ஆகியவை வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் டாக்டர் கோபால கிருஷ்ணன் தான் ஆஸ்திரேலியா சென்று எம்.எஸ். படிக்க வேண்டும் அதற்கு மேலும் ரூ. 3 லட்சம் வேண்டும் என விஜயலட்சுமியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளார். ஆனால், விஜயலட்சுமியின் பெற்றோரால் ரூ. 50 ஆயிரம் மட்டுமே கொடுக்கப்பட்டது.
மீதி பணத்தை கேட்டு டாக்டர் கோபால கிருஷ்ணன் தொல்லை படுத்தவே, விஜயலட்சுமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து ஆந்திர போலீசார் டாக்டர் கோபால கிருஷ்ணனின் தாயாரை கைது செய்தனர். ஆனால், டாக்டர் கோபால கிருஷ்ணன் தலைமறைவாகி யாருக்கும் தெரியாமல் கேரளா சென்றுவிட்டார்.
கேரளாவில் ஸ்ரீநாத் என பெயர் மாற்றிகொண்டு மருத்துவமனை நடத்திய அவர் சுஜாதா (30) என்பவரை 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஒரு ஆண்டில் அவரை ஏமாற்றிவிட்டு தமிழகம் வந்த அவர்தாராபுரத்தில் டாக்டர் ஜாய் தாயாளன் என பெயர் மாற்றி கொண்டு தனியாக மருத்துவமனை துவக்கினார்.
அங்கு புஷ்பம் (27) என்ற பெண்ணை 2001ல் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் அங்கிருந்து தலைமறைவாகி விட்டார்.
இந்நிலையில் டாக்டர் கோபால கிருஷ்ணனின் இரண்டாவது மனைவி வக்கீல் விஜயலட்சுமி தனது கணவர் குறித்து போலீசில் புகார் செய்ததை அடுத்து இவரது இந்த திருமண லீலைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் டாக்டர் கோபால கிருஷ்ணனை தேடி வருகின்றனர்.