பெட்ரோல் ரூ.2-டீசல் ரூ.1 விலை உயர்கிறது?
டெல்லி: பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்து விட்டதாக தெரிகிறது. பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாயும், டீசல் லிட்டருக்கு ஒரு ரூபாயும் அதிகரிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை பெருமளவில் உயர்ந்து விட்டதால் இந்தியாவிலும் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த மத்திய பெட்ரோலியத்துறை அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.
கச்சா எண்ணை விலை தற்போது ஒரு பீப்பாய் 70.49 டாலராக உள்ளது.
இதுகுறித்து பெட்ரோலியத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பொதுத்துறை எண்ணை நிறுவனங்களைக் காக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. எண்ணை நிறுவனங்களின் சுமை அதிகரித்து விட்டது. இதை அரசு, எண்ணை நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் சேர்ந்து பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.
ஒரு வேளை பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரியை ரத்து செய்ய நிதியமைச்சகம் முடிவு செய்தால் விலை உயர்வுக்கு வாய்ப்பில்லை. அப்படிச் செய்யாவிட்டால் கண்டிப்பாக விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்றார்.