மாவோயிஸ்ட் பந்த்-மாநிலங்களுக்கு டெல்லி எச்சரிக்கை, குண்டு கண்டுபிடிப்பு
டெல்லி: இன்று முதல் 48 மணி நேரத்துக்கு நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்த மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந் நிலையி்ல் இன்று மேற்கு வங்கத்தின் பிராமடி ரயில் நிலையத்தில் டிபன்பாக்ஸ் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.
மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட்னாபூர், லால்கர் மாவட்டங்களில் 50 பழங்குடியின கிராமங்களை மாவோயிஸ்ட் நக்ஸல் அமைப்பினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
இவர்களை விரட்டியடிக்க மத்திய துணை ராணுவ படையினரும் போலீசாரும் கடந்த 6 நாட்களாக தாக்குத் நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் மேற்கு வங்கம், பிகார், ஜார்கண்ட், சட்டீஸ்கர், ஒரிஸ்ஸா ஆகிய மாநிலங்களில், இன்று முதல் 2 நாட்களுக்கு பந்த் நடத்த மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதனால், இந்த மாநிலங்களில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பந்தையொட்டி இந்த 5 மாநிலங்கள் தவிர நகஸ்ல்கள் நடமாட்டம் உள்ள ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட பல மாநிலங்களிலும் வன்முறைகள் நடக்கலாம் என உளவுப் பிரிவுகள் எச்சரித்துள்ளன.
இதையடுத்து அனைத்து மாநில அரசுகளும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி எச்சரித்துள்ளது.
போலீசார் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் மீதும், ரயில், பஸ் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களைக் குறி வைத்தும் தாக்குதல்கள் நடக்கலாம் என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக கூடுதல் செயலாளர் (நக்சல் ஒழிப்புப் பிரிவு) டி.ஆர்.எஸ்.சவுதாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்பு படையினர் ரோந்து மேற்கொள்ளும்போது, கண்ணிவெடி மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் சிக்காமல் விழிப்புடன் இருக்கும்படியும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
லால்கர் செல்ல வேண்டாம்-ப.சிதம்பரம்:
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேற்கு வங்காள மாநிலம், லால்கரில் நிலைமை தொடர்ந்து பதற்றமாகவே உள்ளது. மோதல் நடைபெறும் பகுதிக்கு பொதுமக்கள், குறிப்பாக அரசியல் தலைவர்கள், சமூக சேவை ஆர்வலர்கள் செல்வதை தவிர்க்க வேண்டும்.
அதேபோல பாதுகாப்பு படையினரும் மிகவும் கவனத்துடன் தங்கள் பணியை தொடர வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேற்கு வங்க ரயில் நிலையத்தில் டிபன் வெடிகுண்டு..
இந் நிலையி்ல் இன்று மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தில் உள்ள பிராமடி ரயில் நிலையத்தில் டிபன்பாக்ஸ் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து ஆத்ரா-புருலியா இடையே ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் குண்டுகள் இருக்கலாம் என்று சந்தேகி்கப்படுவதால் ரயில்களிலும் அருகில் உள்ள ரயில் நிலையங்களிலும் தேடுதல் வேட்டை நடக்கிறது.
மேலும் 17 கிராமங்கள் மீட்பு:
இதற்கிடையே நேற்று இரவும் தொடர்ந்து நடந்த துணை ராணுவ வேட்டையில் மிட்னாபூர் மாவட்டத்தில் நக்ஸல்கள் கட்டுப்பாட்டில் இருந்த மேலும் 17 கிராமங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த பழங்குடி கிராமங்கள் அடர்ந்த வனப் பகுதிகளில் உள்ளதால் நக்கல்களை விரட்டிவிட்டு கிராமங்களை மீட்பதில் பெரும் தாமதம் நிலவி வருகிறது. மீட்கப்பட்ட கிராமங்களை மேற்கு வங்க ஆயுதப் படை போலீசார் பாதுகாத்து வருகின்றனர்.
சரணடைய உத்தரவு:
இந் நிலையில் மவோயிஸ்டுகள் ஆயுதங்களைக் கைவிட்டு உடனடியாக சரணடைய வேண்டும் என்று மேற்கு வங்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தடை செய்வது தீர்ப்பல்ல: பர்தன்
இதற்கிடையே நக்ஸலைட்டுகளை தடை செய்வதன் மூலம் மவோயிஸ்டுகள் பிரச்சனையைத் தீர்க்க முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியித் தலைவர் பர்தன் கூறியுள்ளார்.
வன்முறையை தூண்டும் மம்தா:
இதற்கிடையே நக்ஸல்கள் தாக்குதல் நடத்தி வரும் மேற்கு வங்கப் பகுதிகளில் தீவிரவாதத்தைத் தூண்டிவிடும் வகையில் மம்தா பானர்ஜியின் கட்சி எம்பிக்கள் பேசி வருகின்றனர்.
இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இடதுசாரிக் கட்சி எம்பிக்கள் 16 பேர் கையெழுத்திட்டுள்ள கடிதம் ஒன்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.