மும்பை: பிரபல தாதாவின் கூட்டாளி சுட்டு கொலை
மும்பை: மும்பையின் பிரபல அன்டர்கிரவுண்ட் தாதா ஹேம்நாத் பூஜாரியின் கூட்டாளியான அனூப் மிஸ்ரா என்பவரை மும்பை போலீஸார் நேற்று மாலை நடந்த என்கெளன்டரில் சுட்டுக் கொன்றனர்.
புறநகர்ப் பகுதியான மலட் என்ற இடத்தில் உள்ள ஐநார்பிட் வணிக வளாகப் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
இங்குள்ள நகைக் கடை ஒன்றின் உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டியிருந்தார் அனூப் மிஸ்ரா. இந்தப் பணத்தை வாங்க நேற்று மாலை அங்கு மிஸ்ரா வருவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து மும்பை குற்றப் பிரிவின் 9வது பிரிவு போலீஸார் அனூப்பைப் பிடிக்க வலை விரித்தனர்.
மிஸ்ரா அந்த நகைக் கடைக்கு வந்தபோது, அவரை போலீஸார் சுற்றி வளைத்தனர். சரணடையுமாறு உத்தரவிட்டனர். ஆனால் அதை நிராகரித்த மிஸ்ரா, தனது துப்பாக்கியால் போலீஸாரை நோக்கி 2 ரவுண்டு சுட்டார். மேலும் அங்கிருந்து தப்பவும் முயன்றார்.
இதையடுத்து போலீஸார் மிஸ்ராவை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில் மிஸ்ரா சுருண்டு விழுந்தார். தலையிலும், மார்பிலும் குண்டுகள் பாய்ந்த நிலையில், அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மிஸ்ரா இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
மும்பையின் பிரபல தாதாக்களில் ஒருவரான பூஜாரியிடம் கூலியாளாக வேலை பார்த்து வந்தவர்தான் மிஸ்ரா. 22 வயதே ஆகிறது. 2007ம் ஆண்டு போலீஸ் உளவாளி சுரேஷ் ஷெட்டி கொலை வழக்கில் மிஸ்ரா முக்கியக் குற்றவாளி ஆவர்.
இதுதவிர ஏராளமான கொலை, கொலை முயற்சி, பணம் பறிப்பு உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையவர் மிஸ்ரா என்பது குறிப்பிடத்தக்கது.