பல்லடம் அருகே பயங்கரம் - மணல் லாரி அடுத்தடுத்து 4 வாகனங்களில் மோதி 14 பேர் பலி
பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இன்று மாலை மணல் லாரி ஒன்று டெம்போ டிராவலர், 3 கார்கள் மீது அடுத்தடுத்து மோதியதில் 14 பேர் உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம் மதுக்கரையிலிருந்து பெண் பார்ப்பதற்காக கீரனூர் நோக்கி டெம்போ டிராவலர் வேனில் ஒரு குடும்பத்தினர் சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் பயணம் செய்த வேன், பல்லடம் அருகில் லட்சிமி மில்ஸ் பகுதியில் சென்றபோது எதிர் திசையில் மணல் ஏற்றி வந்த லாரி பயங்கரமாக மோதியது.
இதில் டெம்போ டிராவலரில் பயணித்த ஒரு குழந்தை உள்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பின்னர் நிற்காமல் தொடர்ந்து தாறுமாறாக சென்ற லாரி ஒரு கார் மோதி சேதப்படுத்தியது. பிறகும் நிற்காமல் அதி வேகமாக சென்ற அந்த எமன், மேலும் இரு கார்களை மோதித் தள்ளியது.
இதில் 2வதாக மோதிய ஒரு இன்டிகா காருக்குள் இருந்த இருவர் லாரியின் அடியில் சிக்கி பரிதாபமாக மாண்டனர்.
இப்படி நான்கு வாகனங்களை மோதித் தள்ளி விட்டு 14 பேரின் உயிரைக் குடித்த மணல் லாரி சாலையோரமாக உள்ள பள்ளத்தில் போய் மோதி நின்றது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட இந்த கோர விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.