நடராஜர் கோவிலில் எதியூரப்பாவுக்கு கறுப்பு கொடி-54 பேர் கைது
நேற்று டெல்லியிலிருந்து சென்னை வந்த எதியூரப்பா இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் காரைக்காலுக்கு ஹெலிகாப்டரில் சென்று அங்கிருந்து திருநள்ளாறுக்கு காரில் சென்றார். அங்கு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் தரிசனம் மேற்கொண்டார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்ய வேண்டும் என்று சனீஸ்வர பகவானை வேண்டிக் கொண்டேன். காவிரிப் பிரச்சனைக்க சுமூகத் தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.
இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தளத்தில் வந்திறங்கி அங்கிருந்து கார் மூலம் நடராஜர் கோயிலுக்குச் சென்றார். அவரை கோயில் தீட்சிதர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.
பின்னர், கோயிலில் நடைபெற்ற சிறப்பு ருத்ராபிஷேக பூஜை மற்றும் விசேஷ பூஜையில் எதியூரப்பா கலந்து கொண்டு வழிபாடு செய்தார். கோவிந்தராஜ பெருமாள் சந்நிதியிலும் அவர் வழிபாடு நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூறியதாவது: தமிழக மக்களுக்கும், கர்நாடக மக்களுக்கும் இடையே நல்லுறவு நிலவுகிறது. தமிழக முழுவதும் உள்ள கோயில்களுக்கு சென்று நான் வழிபாடு செய்து வருகிறேன். அதன் ஒரு பகுதியாகவே சிதம்பரம் கோயிலுக்கு வந்தேன்.
காவிரி நதி நீர் பிரச்சனை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதுபற்றி நான் எதுவும் பேசமுடியாது. ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தில் சில பிரச்சனைகள் உள்ளன. அவற்றை தமிழகமும், கர்நாடகமும் பேசி தீர்த்துக் கொள்ளலாம். தமிழக அரசின் நிர்வாகம் மிக நன்றாக உள்ளது. முதல்வர் கருணாநிதி என்னுடைய சிறந்த நண்பர் என்றார் எடியூரப்பா.
பின்னர் சிதம்பரத்தின் ஊர் எல்லையில் உள்ள குங்குமத்தால் ஆன தில்லை காளிஅம்மன் கோயிலிலும் எதியூரப்பா வழிபட்டார். இதையடுத்து அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்கு சென்று மதிய உணவை முடித்துக் கொண்டு தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக தமிழகத்துக்கு காவிரி நீரை அளிக்காத கர்நாடக முதல்வர் தமிழகம் வரக்கூடாது என கூறி தமிழக இளைஞர் இயக்கம், உழவர் முன்னணி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கறுப்புக் கொடி போராட்டம் நடத்த நடராஜர் ஆலயத்தை நோக்கி வந்தனர்.
இதையடுத்து விரைந்து வந்த போலீசார் அவர்களை வழிமறித்து கைது செய்தனர்.
எதியூரப்பா வருகையை எதிர்த்து தமிழக உழவர் முன்னணி சார்பில் சிதம்பரம் நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
மேலும் இந்த அமைப்பின் தலைவர் தேவராஜ், எதியூரப்பாவுக்கு கறுப்பு கொடி காட்ட போலீஸ் அனுமதி கேட்டிருந்தார். அதற்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தான் அதை மீறி பேராட்டம் நடத்த முயன்ற இந்த அமைப்பினர் கைதாகியுள்ளனர்.
எதியூரப்பா வருகையையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவில் மற்றும் தில்லை காளியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பாதுகாப்பு-அதிகாரிகள் மோதல்:
முன்னதாக எதியூரப்பாவுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் கர்நாடக அதிகாரிகள், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
எதியூரப்பா விமான நிலையத்துக்கு வரும முன் அவரது பாதுகாப்பு அதிகாரியான ரமேஷ் என்பவர் வந்தார். எதியூரப்பா ஹெலிகாப்டரில் ஏற வசதியாக விமான நிலையக்குக்குள் ரன் வேக்கு அருகே வரை கார் செல்ல அனுமதி கேட்டார்.
ஆனால், இது குறித்து முன் கூட்டியே அனுமதி பெறவில்லை என்று கூறி காரை உள்ளே விட முடியாது என விமான நிலைய அதிகாரிகள் கூறினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து உயர் அதிகாரிகள் வந்து உரிய அனுமதியைத் தந்து கார் உள்ளே செல்ல அனுமதித்தனர்.
விரைவில் கர்நாடக அரசு கவிழும்: மொய்லி
இதற்கிடையே பாஜகவில் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை அடைந்துள்ளதால் கர்நாடக அரசு விரைவிலேயே கவிழும் என்று மூத்த காங்கிரஸ் தலைவரும் மத்திய சட்ட அமைச்சருமான வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.
பெங்களூரில் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பேசிய அவர், பாஜகவில் தேசிய அளவிலும் கர்நாடகத்திலும் உட்கட்சிப் பூசல் தீவிரமாகிவிட்டது. எனவே விரைவில் கர்நாடக அரசு கவிழும். இதனால் சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரசார் தயாராக வேண்டும் என்றார்.