ராணுவம் வாகன தாக்குதல்-மதிமுகவிடம் விளக்கம் கேட்கும் ஐகோர்ட்
சென்னை: கோயம்புத்தூரில் இந்திய ராணுவ வாகனங்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் மதிமுக மற்றும் பெரியார் திராவிட கழக தலைமைகள் தங்களது கருத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கைக்கு கோயம்புத்தூர் வழியாக இந்திய ராணுவம் ஆயுதங்களை கொண்டு செல்வதாக தகவல் பரவியது. இதையடுத்து கடந்த மே 3ம் தேதி அன்று மதிமுக மற்றும் பெரியார் திராவிட கழகத்தினர், நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் ராணுவ வாகனங்களை மறித்து தாக்குதல் நடத்தினர்.
மேலும், அந்த ராணுவ வாகனத்தில் இருந்த பொருட்களை சூறையாடினர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மதிமுக மற்றும் பெரியார் திராவிட கழக பொது செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 43 பேரை கைது செய்தனர்.
அவர்களில் மதிமுக நிர்வாகிகள் கருணாநிதி, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட 11 பேர் தங்களுக்கு ஜாமீன் தருமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர். இதன் மீதான விசாரணை இன்று நீதிபதி ரகுபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில் அந்த 11 பேருக்கு ஜாமீன் வழங்ககூடாது என கோரி அரசு தரப்பில் எதிர் மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி கூறுகையில்,
நம் நாட்டையும், மக்களையும் காப்பாற்றுபவர்கள் ராணுவ வீரர்கள் தான். அவர்கள் தாக்கப்பட்டதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களை மதிமுக மற்றும் பெரியார் திராவிட கழக தொண்டர்கள் தாக்கியதற்கு அந்த கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை.
வன்முறை சம்பவங்களில் ஈடுபட கூடாது என தலைவர்கள் தங்களது தொண்டர்களை கண்டித்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அப்படி எதுவும் செய்யவில்லை. ஆனால், இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் கருத்து தெரிவிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.
இந்த இரு கட்சிகளும் ராணுவ வீரர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் தங்களது நிலைப்பாடு குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன்.
ஜாமீன் வழங்குவதற்கு அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு வரும் 25ம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.