மாவோயிஸ்டுகளுக்கு தடை-சிபிஎம் எதிர்ப்பு: மே.வங்க அரசு ஏற்பு
டெல்லி: மாவோயிஸ்ட் அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்துள்ளது. ஆனாலும் இந்தத் தடையை மேற்கு வங்க அரசு அமல்படுத்துவதாக அறிவித்துவிட்டது.
தீவிரவாத இடதுசாரிகளான மாவோயிஸ்டுகள் மேற்கு வங்கத்தில் 50 கிராமங்களைப் பிடித்து வைத்துக் கொண்டு துணை ராணுவத்தினர், போலீசார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்களைத் தாக்கி வருகி்ன்றனர்.
கண்ணி வெடிகளை செயல் இழக்க செய்யும் நவீன வாகனங்கள் உதவியுடன் துணை ராணுவமும் போலீஸாரும் முன்னேறியபடி உள்ளனர். நேற்றிரவு வரை 22 கிராமங்களை பாதுகாப்புப் படையினர் மீட்டனர். மேலும் 20 கிராமங்களை மீட்க தொடர்ந்து அதிரடி வேட்டை நடந்து வருகிறது.
பிடிபட்ட பகுதிகளில் போலீஸ் கிளை அலுவலகங்கள் திறக்கப்பட்டு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் முழுவதும் ரோந்து பணி நடந்து வருகிறது.
இன்று லால்கரில் இருந்து ராம்கார் நகர் நோக்கி பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அந்த சாலை நெடுக கண்ணி வெடிகள் ஏராளமாக புதைத்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அகற்றியபடி மெல்ல முன்னேறி வருகிறார்கள்.
இந் நிலையில் மாவோயிஸ்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதை பாஜக வரவேற்றுள்ளதோடு, மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடைய பிற அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது.
ஆனால், இந்தத் தடைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் பிரகாஷ் காரத் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், மாவோயிஸ்டுகளை மக்களிடமிருந்து பிரிக்க வேண்டும். அவர்களை அரசியல்ரீதியாகவும் நிர்வாகரீதியாகவும் தான் ஒடுக்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு தடை விதிப்பதால் பெரிய அளவில் பலன் ஏற்பட்டுவிடாது. அவர்கள் வேறு பெயரை சூட்டிக் கொண்டு இயங்கிக் கொண்டு தான் இருப்பார்கள்.
அவர்களை மக்களிடமிருந்து பிரிக்கும் வேலையை நாங்கள் ஈடுபட்டதால் தான் எங்களையும் அவர்கள் எதிர்க்கின்றனர் என்றார்.
ஆனால் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா கூறுகையில், மத்திய அரசு விதித்துள்ள தடை குறித்து விவாதித்து உரிய முடிவெடுக்கப்படும் என்றார். இந் நிலையில் இன்று இந்தத் தடையை ஏற்பதாக முதல்வர் அறிவித்துவிட்டார்.
இதற்கிடையே மாவோயிஸ்டுகளை மத்திய அமைச்சர் மம்தா பானர்ஜி தான் மறைமுக தூண்டிவிட்டு வருவதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால், மாவோயிஸ்டுகளுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், தடை விஷயத்தில் அவர் மத்திய அரசை ஆதரிக்கிறாரா இல்லையா என்று சொல்லாமல் நழுவி வருகிறார்.
தடைக்கு இந்து முன்னணி ஆதரவு:
இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மாவோயிஸ்ட்கள் (நக்ஸலைட்கள்) மீதான தடையை கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பதன் மூலம் வலதுசாரி, இடதுசாரி கம்யூனிஸ்ட்கள், மாவோயிஸ்ட்கள், நக்ஸலைட்கள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாகக் கொண்ட தெய்வீகத் தமிழகத்தில் மாவோயிஸ்ட்களை (நக்ஸலைட்களை) அனுமதிப்பது பேராபத்து!. திமுக, அதிமுக கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும்.
தடையை எதிர்க்கும் வலதுசாரி, இடதுசாரி, கம்யூனிஸ்ட்களை மக்கள் வெறுத்து ஒதுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராமகோபாலன்.
(இதுக்கு கருத்து தெரிவித்த ராம கோபாலன், பாஜக உட்கட்சி சண்டை பத்தி ஒன்னுமே சொல்லலையே...)