மினி லாரி மரத்தில் மோதியதில் 7 பேர் பலி
திருச்சி: திருச்சி மாவட்டம் முசிறி அருகே சாலையோரம் இருந்த மரத்தின் மீது மினி லாரி பயங்கரமாக மோதியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாமக்கல்லில் இருந்து முசிறிக்கு நேற்று மாலை ஒரு தனியார் பேருந்து வந்து கொண்டு இருந்தது. 5 மணி அளவில் அந்த பஸ் முசிறி அருகே வந்த போது திடீர் என டயர் பழுதடைந்தது.
இதையடுத்து பஸ்சை சாலை ஓரம் நிறுத்தினார் டிரைவர். பயணிகள் கீழே இறங்கி பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது தாத்தையங்கார் பேட்டையிலிருந்து ஒரு மினி லாரி அந்தப் பக்கமாக வந்தது. அதை நிறுத்திய பயணிகளில் சிலர் லாரியில் பயணம் செய்தனர்.
சிட்டிலரை கைகாட்டி என்ற இடத்தில் சென்ற போது அந்த மினிலாரி திடீர் என தறிகெட்டு ஓடி சாலை ஓரம் இருந்த புளிய மரத்தில் மோதியது.
இதில் மினிலாரியில் இருந்த பயணிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயமடைந்த 15 பேர் திருச்சி மற்றும் முசிறி மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களில் 4 பேர் சிகிச்சை பலனில்லாமல் இறந்து போயினர். இறந்த 7 பேரில் காட்டுப்புத்தூர் ரமேஷ், நச்சலூர் அன்புராஜ், சமயபுரம் கணேசன், குளித்தலை லெவின் குமார், தண்ணீர்பள்ளி நாகராஜன் ஆகியோரது அடையாளம் மட்டும் தெரிய வந்துள்ளது.
பல்லடம்-பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.50,000
இதற்கிடையே பல்லடத்தில் நேற்று நடந்த சாலை விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 50,000 ஆயிரம் வழங்க தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,
திருப்பூர் மாவட்டம் செம்மிபாளையம் கிராமத்தில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கோவை நோக்கிச் சென்ற மணல் லாரியும், கோவையில் இருந்து பல்லடம் நோக்கி வந்த டெம்போ டிராவலர்ஸ் வேன், இன்டிகோ கார் ஆகியவைகளும் நேற்று மோதிக் கொண்டது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
இச் சம்பவம் குறித்து ஆழ்ந்த வருத்தமும் வேதனையும் அடைந்துள்ளதாக தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்க்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர் குடும்பம் ஒவ்வொன்றிற்கும் தலா ரூ.50 ஆயிரம் வீதமும், காயமுற்றோர்க்கு தலா ரூ.20 ஆயிரம் வீதமும், மொத்தம் ரூ.7 லட்சத்து 20 ஆயிரம், முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.