சொன்னதை செய்வார் முதல்வர்-தமிழரசி
திருவேங்கடம்: முதல் கருணாநிதி சட்டசபை தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். அவர் சொன்னதை செய்வார் என தமிழக ஆதி திராவிட மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் தமிழரசி தெரிவித்துள்ளார்.
சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூர் தேரடி திடலில் இலவச கலர் டிவி மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு நெல்லை கலெக்டர் ஜெயராமன் தலைமை வகித்தார். தென்காசி எம்பி லிங்கம் முன்னிலை வகித்து பேசினார். கரிவலம்வந்தநல்லூர் பஞ் தலைவர் பால்ராஜ் வரவேற்றார்.
விழாவில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் தமிழரசி இலவச கலர் டிவி மற்றும் முவலுர் ராமமிர்தம் அம்மையார் பெண்கள் திருமண உதவி, குறிஞ்சி, முல்லை, சத்யா மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு பொருளாதார கடன்கள், உள்ளிட்ட பல்வேறு அரசு நலதிட்ட உதவிகளையும் வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில்,
கடந்த சட்டசபை தேர்தலில் முதல்வர் கருணாநிதி கொடுத்த வாக்குறுதியில் ஒன்றுதான் இந்த இலவச கலர் டிவி வழங்குதல். கிராமப்புற பெண்கள் நாட்டு நடப்பு மற்றும் பகுத்தறிவு கருத்துகளை தெரிந்து கொள்வதற்காகதான் அவர் இலவச கலர் டிவி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்.
யார் நன்மை செய்கிறார்கள் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். விவசாயிகளுக்கு பயிர் கடன் வட்டி அறவே இல்லை என தள்ளுபடி செய்தவர் முதல்வர். அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார். இப்பகுதியில் 508 முதியோர்களுக்கு மாதம் ரூ. 400 முதியோர் உதவி தொகை வழங்கப்படுகிறது என்றார் தமிழரசி.