போலீஸ் வேடம்:ரூ. 50 லட்சம் கொள்ளை-திமுக பிரமுகர் உட்பட 5 பேர் கைது
சென்னை: சென்னையில் நகை கடை ஊழியரிடம் போலீஸ் வேடமிட்டு ரூ. 50 லட்சம் கொள்ளையடித்த திமுக பிரமுகர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பாரிமுனையில் ரத்தன்லால் ஜெயின் என்பவர் நகைகடை வைத்து நடத்தி வருகிறார். அவரது வீடு கீழ்ப்பாக்கம் பிளவர்ஸ் சாலையில் இருக்கிறது.
இந்நிலையில் ரத்தன்லாலின் கடை ஊழியர் கமல்ராஜ் என்பவர் ரூ. 50 லட்சத்துடன் புரசைவாக்கம் ஐரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று போலீஸ் வேடமிட்டு கமல்ராஜை வழிமறித்து சோதனை செய்தது. பின்னர் அவரிடம் இருந்த ரூ. 50 லட்சத்தை பறித்து கொண்டு சென்றுவிட்டது.
கமல்ராஜ் அது நிஜ போலீஸ் அல்ல என்பதை உணர்வதற்குள் அந்த கும்பல் பணத்துடன் மாயமாக மறைந்துவிட்டது. இதையடுத்து அவர் ரத்தன்லால் ஜெயினிடம் சம்பவத்தை கூறினார். இதையடுத்து அவர் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கமல்ராஜ் ரூ. 50 லட்சம் பணம் கொண்டு வருவதை முன்னதாக தெரிந்து கொண்டு அந்த மர்ம கும்பல் செயல்பட்டுள்ளதை கண்டுபிடித்தனர். மேலும், இந்த கொள்ள சம்பவத்தில் 9 பேர் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த சத்யா என்பவர் போலீசில் சரண் அடைந்தார்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் திமுக வட்ட துணை செயலாளர் குடியரசு, பகுஜன் சமாஜ் கட்சியின் இளைஞர் அணி பிரமுகர் சக்திவேல், ரத்தன்லால் ஜெயினிடம் மானேஜராக வேலை பார்த்த கண்ணன், மதன், ஜெயக்குமார் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் இவர்களிடம் இருந்து ரூ. 40 லட்சம் பணத்தை மீட்டனர். மீதி ரூ. 10 லட்சம் சசி, அம்பேத், மகாதேவன் என்னும் மூன்று பேரிடம் இருப்பதாக அவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இதையடுத்து போலீசார் தலைமறைவாகி இருக்கம் அந்த மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.
மதுரையில் என்ஜினியரிடம் ரூ. 3 லட்சம் கொள்ளை:
மதுரையில் நடந்த மற்றொரு சம்பவத்தின் என்ஜினியர் ஒருவரிடம் போலீஸ் வேடமிட்ட நான்கு பேர் சேர்ந்து ரூ. 3 லட்சத்தை கொள்ளையடித்துள்ளனர்.
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருபவர் பாலகிருஷ்ணன் (40). இவர் நேற்று மதுரை அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் டாக்டர் பாரதி என்பவருக்கு கொடுப்பதற்காக ரூ. 3 லட்சம் பணத்துடன் மதுரைக்கு வந்துகொண்டிருந்தார்.
வாடிப்பட்டி அருகே வந்த போது மூன்று ஆண் மற்றும் ஒரு பெண் அவரது காரை வழிமறித்து நிறுத்தினர். அவர்களில் போலீஸ் உடையில் இருந்த ஒரு ஆண் உங்கள் வண்டியை சோதனையிட வேண்டும் என கூறியுள்ளார். பின்னர் அவர் வைத்திருந்த பையில் இருக்கும் ரூ. 3 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
பணத்தை ஏன் பறிமுதல் செய்கிறீர்கள் என பாலகிருஷ்ணன் கேட்டதற்கு அவர்கள் காவல் நிலையத்தில் வந்து வாங்கி கொள்ளுமாறு கூறினர். ஆனால், பாலகிருஷ்ணன் நம்பவில்லை. இதையடுத்து அவர்களுடன் வந்த பெண், பாலகிருஷ்ணனுடம் காரில் ஏறிக்கொண்டார்.
காரை காவல் நிலையத்துக்கு விடுமாறு அந்த பெண், பாலகிருஷ்ணனிடம் தெரிவித்துள்ளார். சிறிது தூரம் சென்றவுடன் அந்த பெண் பின்னால் வந்த மற்றொரு காரில் ஏறிக்கொண்டு பணத்தை காவல் நிலையத்தில் வந்து வாங்கி கொள்ளுமாறு கூறிவிட்டு, காரில் மாயமாகிவிட்டார்.
இதையடுத்து பாலகிருஷ்ணன் காவல் நிலையத்துக்கு சென்று விசாரித்த போது, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதையடுத்து மதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.