நன்கொடை-4 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை
சட்டசபையில் இன்று உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாத விவரம்:
சி.வி. சண்முகம் (அதிமுக): தமிழ்நாட்டில் இன்று என்ஜினீயரிங் கல்லூரிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால் தரம் குறைந்துவிட்டது. அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தன்னிச்சையாக மாநில அரசு கருத்தை கேட்காமல் அனுமதி கொடுக்கிறது.
அதே போல பி.எட் கல்லூரிக்கும் அதிக அளவில் அனுமதி கொடுத்து இருக்கிறீர்கள். கல்லூரிகளில் ஷிப்டு முறையை அறிமுகப்படுத்தினீர்கள். இதில் 1 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். ஆனால் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் நன்கொடை என்ற பெயரில் பணம் பறிக்கிறார்கள் அடிக்கிறார்கள். இதை கண்காணிக்க குழு உள்ளது. அந்த குழு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
நீங்கள் அமைத்துள்ள உயர் மன்றக் குழுவுக்கு என்ன அதிகாரம் உள்ளது?. அதிகாரம் இல்லாத இந்தக் குழுவினர் சமீபத்தில் ஆய்வு நடத்தியுள்ளனர். ஆனால், இதுவரை அதிக நன்கொடை வாங்கிய கல்லூரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
அமைச்சர் பொன்முடி: கல்லூரிகளில் நன்கொடை வாங்குவது இன்று, நேற்றல்ல, நீண்ட காலமாக நடக்கிறது. அதைத் தடுக்கும் முயற்சியில் உங்கள் அரசும் செயல்பட்டது. நாங்களும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இந்த அரசைப் பொறுத்தவரை மாணவர்கள் நலனில் அக்கறை செலுத்தும் அரசாகத்தான் உள்ளது. ஒரு குழுவை கல்லூரிகளுக்கு சோதனை செய்ய அனுப்பினோம். அவர்கள் கல்லூரிகளில் நடந்த தவறுகளை கண்டறிந்துள்ளனர். கல்லூரிகளில் நன்கொடை வாங்கியது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து தற்போது 4 என்ஜினீயரிங் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். அந்தக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் மூலம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்.
பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்): நன்கொடையை தடுக்க வேண்டும் என்றால் நாம் சில சட்ட திருத்தத்தை கொண்டு வரவேண்டும். என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர மாணவர்கள் பிளஸ்-2 ரிசல்ட் முடிந்து 2 மாதமாக காத்திருக்க வேண்டியது உள்ளது. பிளஸ்-2 ரிசல்ட் வரும்போதே மாணவர்களுக்கு 'ரேண்டம் எண்' வழங்க வேண்டும்.
பொன்முடி: நீங்கள் சொல்லும் யோசனையையும் நாங்கள் ஆலோசித்து உள்ளோம். அதில் நடைமுறை சிக்கல் நிறைய உள்ளது. தேர்வு முடிவு வந்து மதிப்பெண் வர ஒரு வாரம் ஆகிறது. அதன் பிறகு விண்ணப்பிக்க ஒரு வாரம் ஆகிறது.
மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பை தேர்ந்தெடுக்கிறார்களா, அல்லது என்ஜினீயரிங் படிப்பை தேர்வு செய்கிறார்களா என்றெல்லாம் கேள்வி வருகிறது. இருந்தாலும் இண்டர்நெட் மூலம் விண்ணப்பம் சேகரித்து ரேண்டம் எண் கொடுக்க ஆலோசனை நடக்கிறது.
பீட்டர் அல்போன்ஸ்: சுயநிதி கலை அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் கல்வி உதவி தொகையை நிறுத்திவிட்டீர்கள். அது மீண்டும் கிடைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டப்படும் என்ஜினீயரிங் கல்லூரிக்கு வ.உ.சி. பெயரையும், கன்னியாகுமரி மாவட்டத்தில் அமையும் என்ஜினீயரிங் கல்லூரிக்கு நேசமணி பெயரையும் வைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்வர் கருணாநிதி:
வ.உ.சி. இழுத்த செக்கு எங்கே இருக்கிறது என்று தேடிப் பார்த்தபோது 1967ல் ஆட்சிக்கு வந்த திமுக தான் அந்த செக்கு கோவை சிறையில் இருந்ததை கண்டுபிடித்தது. அதை சென்னையில் நினைவு சின்னமாக வைத்தோம். எனவே தூத்துக்குடி என்ஜினீயரிங் கல்லூரிக்கு வ.உ.சி. பெயரை வைப்பதில் ஆட்சேபனை எதுவும் இல்லை.
இப்போது கட்டப்பட்டு வரும் சட்டமன்ற வளாகம் கூட ஓமந்தூரார் பெயரில்தான் உள்ளது என்றார்.