நகைகளுடன் கம்பி நீட்டிய அடகு கடைக்காரர்-ரூ. 34 லட்சம் மோசடி
சென்னை: சென்னையில் மக்கள் தன்னிடம் அடகு வைத்த நகைகளை அடகு கடைக்காரர் ஒருவர் வங்கியில் அடகு வைத்து ரூ. 34 லட்சத்து 66 ஆயிரத்தை வாங்கி கொண்டு தலைமறைவானார். போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னை சூளை சட்டண்ணநாயக்கர் தெருவில் கேரளாவை சேர்ந்த நம்பியாத் மோகன்தாஸ் என்பவர் கடந்த நான்கு ஆண்டுகளாக அடகு கடை நடத்தி வருகிறார். இவரிடம் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்களது நகைகளை அடகு வைத்து பணம் சென்றுள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மோகன்தாசை காணவில்லை. இதையடுத்து அவர்கள் அக்கம் பக்கத்தில் விசாரித்த போது அவர் நகைகளுடன் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்களில் எட்டு பேர் போலீசில் சென்னை, பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, மோகன்தாசை தேடி வருகின்றனர்.
போலீசார் விசாரணையின் போது மோகன்தாஸ் மக்களிடம் இருந்து அடமானமாக வாங்கிய நகைகளை அவர் அப்பகுதியில் இருக்கும் நான்கு வங்கிகளில் அடமானம் வைத்து ரூ. 34 லட்சத்து 66 ஆயிரம் வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து போலீசார் அந்த வங்கிகளில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது வங்கி அதிகாரிகள் வட்டியுடன் பணத்தை திருப்பி கொடுத்தால் மட்டுமே நகைகளை கொடுக்க முடியும் என உறுதியாக கூறிவிட்டனர்.
இந்நிலையில் பேசின் பிரிட்ஜ் போலீசார் இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றிவிட்டனர்.
நகைகளை பறிகொடுத்த மக்கள் நம்பியாத் மோகன்தாசை உடனடியாக கைது செய்து, தங்களது நகைகளை மீட்டு தர வேண்டும் என காவல் துறையினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.