ஒரு ஆட்டோவில் 10 குழந்தைகள்-நடவடிக்கை கோரும் எஸ்வி.சேகர்
சென்னை: ஒரு ஆட்டோவில் 10 குழந்தைகளை ஏற்றி்ச் செல்வோர் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டசபையில் அதிமுக அதிருப்தி எம்எல்ஏ எஸ்.வி.சேகர் கோரிக்கை விடுத்தார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது நடந்த விவாத விவரம்:
எஸ்.வி.சேகர்: ஒரு ஆட்டோவில் 10 குழந்தைகள் பயணம் செய்கிறார்கள். இதனால் விபத்துக்கள் ஏற்படுகிறது. இதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என். நேரு: 14 வயதுக்குட்பட்ட 5 குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றிச் செல்லலாம் என்று அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் விதிகளை மீறி நிறைய குழந்தைகளை ஏற்றிச் செல்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோல இரண்டு சக்கர வாகனங்களில் அதிக எண்ணிக்கையில் பயணம் செய்பவர்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
எஸ்.வி.சேகர்: ஆட்டோக்களில் முன் இருக்கையிலேயே 5 குழந்தைகள் இருக்கிறார்கள். அதை சில போலீசார் அனுமதிக்கிறார்கள்.
நேற்று முன்தினம் ஒருவர் 4 குழந்தைகளை ஏற்றிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் கீழே விழுந்ததில் அவர் தலையில் காயம் ஏற்பட்டது. நான் அவருக்கு ரூ.100 கொடுத்து அனுப்பி வைத்தேன். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே விதிகளை மீறுபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்குமா?
நேரு: தற்போது சென்னையில் மட்டும் 40,845 ஆட்டோக்கள் ஓடுகின்றன. தமிழ்நாடு முழுவதும் 1,51,655 ஆட்டோக்கள் ஓடுகின்றன. தவறும் செய்யும் ஆட்டோக்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கடந்த 1.4.2008 முதல் 31.3.2009 வரை விதிகளை மீறிய 4,796 ஆட்டோ ஓட்டுனர்களிடம் இருந்து ரூ. 23.98 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் விதிகளை மீறிய 1,234 ஆட்டோ ஓட்டுனர்களிடம் இருந்து ரூ. 6.12 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை சிலர் ஆதரிக்கிறார்கள். சிலர் எதிர்க்கிறார்கள்.
நேற்று கூட விபத்துக்களில் 15 பேர் இறந்துள்ளனர். எனவே எம்எல்ஏக்களும் தாங்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களில் விபத்து ஏற்படாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்த கருத்துக்களை சொல்ல வேண்டும் என்றார்.