மகிந்திரா சத்யம் மறுபடியும் முதல்நிலைக்கு வரும்! - புதிய சிஇஓ
மகிந்திரா சத்யம் நிறுவனத்தை மீண்டும் முதல்நிலைக்குக் கொண்டுவருவதே இப்போதைய தனது ஒரே இலக்கு என அதன் புதிய தலைமை செயல் அலுவலர் பி குர்னானி கூறியுள்ளார்.
மகிந்திரா சத்யம் நிறுவனத்தின் சிஇஓவாகப் பொறுப்பேற்ற கையோடு அவர் அளித்த பேட்டி:
இப்போது என் முன் உள்ள பெரிய சவால் மகிந்திரா சத்யம் நிறுவனத்தை வெகு விரைவில் ஐடி துறையின் முதல்நிலைக்குக் கொண்டு வருவதுதான். அதற்கு, நிறுவனத்தின் அனைத்து வளங்களையும் சரியான முறையில் முழுமையாகப் பயன்படுத்தப் போகிறோம்.
அதேபோல நிறுவனத்தில் மகிந்திராவின் பங்குகள் அளவை 31 சதவிகிதத்திலிருந்து 43 சதவிகிதமாக உயர்த்தும் திட்டமும் உள்ளது.
அடுத்து முக்கியமானது, இப்போதுள்ள வாடிக்கையாளர்களை தக்கவைப்பது. ஓரளவு அதில் வெற்றியும் பெற்றுவிட்டோம் என்றே நம்புகிறேன்.
பெரிய நிறுவனங்களுடன் முன்பு போடப்பட்ட ஒப்பந்தங்களிணன் மதிப்பை மீண்டும் உயர்த்தும் திட்டம் ஏதுமில்லை. மகிந்திரா சத்யம் தனது வாக்குறுதிகளைக் காக்கும் என்ற நம்பிக்கை வாடிக்கையாளர்களுக்குத் தொடரும் வகையில் செயல்பாடுகள் அமையும்.
நிறுவனம் எதிர்நோக்கும் சட்ட சிக்கல்கள் குறித்து இப்போது வெளிப்படையாக எதுவும் சொல்ல முடியாது. ஆனால் விரைவில் கூட்டு முயற்சில் அனைத்து சிக்கல்களிலிருந்தும் மீண்டு வருவோம், என்று அந்தப் பேட்டியில் கூறியுள்ளார் குர்னானி.