ராஜபக்சே சகோதரர்கள் இன்று இந்தியா வருகை
இலங்கையில் புலிகளுக்கு எதிரான போர் முடிவடைந்த பின்னர் டெல்லி வரும் முதல் உயர் மட்டக் குழு இதுவாகும். இந்தத் தகவலை மிக ரகசியமாக வைத்திருந்து இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கோதபய, பாசில், லலித் வீரேதுங்கா ஆகியோர் கொண்ட இந்தக் குழு பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர மேனன், பாதுகாப்புத்துறைச் செயலாளர் விஜய் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசுகின்றனர்.
இறுதியாக வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவையும் சந்திக்கின்றனர்.
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குறித்தும், தமிழர்களுக்கு சம அரசியல் அதிகாரங்கள் வழங்குவது குறித்தும் இவர்கள் ஆலோசனை நடத்தப் போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதிபர் ராஜபக்சேவும் இந்தியா வர விருப்பம் தெரிவித்து வருகிறார். ஆனால், தமிழகத்தில் எதிர்ப்பு வரலாம் என்பதால் அவரை பின்னர் வருமாறு மத்திய அரசு கூறிவிட்டது.
இந் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.எம்.கிருஷ்ணா, இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணம், மறுவாழ்வு, சம அந்தஸ்து குறித்து பேச்சு நடத்தவுள்ளோம். மேலும் ஐரோப்பிய தமிழர்கள் அனுப்பிய நிவாரணக் கப்பலை அனுமதிக்குமாறும் இலங்கை குழுவிடம் கோருவோம் என்றார்.
திமுக எம்பி்க்கள் கோரிக்கை..
இந் நிலையில் இன்று கிருஷ்ணாவை டெல்லியி்ல் சந்தித்த திமுக எம்பிக்கள், வணங்காமண் கப்பலை அனுமதிக்குமாறு இலங்கையிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும். அதிலுள்ள நிவாரணப் பொருட்களை தொண்டு நிறுவனங்கள் மூலம் தமிழர்களுக்குச் கொண்டு போய் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்தக் கப்பல் மீது சந்தேகம் உள்ளதாகக் கூறி இந்தியக் கடல் எல்லையிலிருந்து நமது கடற்படை விரட்டிவிட்டது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் இலங்கையிடம் இந்தக் கப்பலை அனுமதிக்குமாறு மத்திய அரசு கோரப் போகிறதாம். இதை கிருஷ்ணாவை சந்தித்து திமுக வலியுறுத்துகிறதாம்.