உத்தரகண்ட் முதல்வராக ரமேஷ் போக்ரியால் தேர்வு
உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தலி்ல உத்தரகண்டில் பாஜக படுதோல்வியடைந்தது.
இதையடுத்து தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று அம்மாநில முதல்வர் பி.சி.கந்தூரி பதவி விலக வேண்டும் முன்னாள் முதல்வரும், மாநிலங்களவை உறுப்பினருமான பகத் சிங் கோஷியாரி ஆதரவு எம்எல்ஏக்கள் போர்கொடி தூக்கினர். மேலும், தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்தார்.
இதை தொடர்ந்து நேற்று பி.சி.கந்தூரி தனது பதவியை ராஜினாமா கடிதத்தை பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் கொடுத்தார்.
இந் நிலையில் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் 35 பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் இன்று டெல்லியி்ல் நடந்தது. இதில் கந்தூரியின் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ரமேஷ் போக்ரியால் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ராமர் கோவில் இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றவர் 51 வயதாகும் போக்ரியால். அப்போது உத்தரகாண்ட் மாநிலம் இல்லை. பாஜக உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்தபோது போக்ரியால் மலைப் பிரதேச வளர்ச்சித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
1991ம் ஆண்டு முதல் முறையாக உ.பி. சட்டசபைக்குத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது கரன்பிரயாக் தொகுதியில் வெற்றி பெற்றார். பின்னர் 93, 96 ஆகிய தேர்தல்களிலும் வெற்றி பெற்றார்.
உத்தரகாண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டபோது (2000) மாநிலத்தின் முதல் முதல்வராக பதவியேற்ற நித்யானந்த சுவாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து பதவியேற்பு விழாவைப் புறக்கணித்து சலசலப்பை ஏற்படுத்தினார்.
இதையடுத்து அவரை கட்சித் தலைமை சமரசப்படுத்தியது. அதன் பின்னர் நிதியமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
முன்னாள் பத்திரிக்கையாளரான போக்ரியால், அரசியலில் நிதானமாக வளர்ந்து வந்தவர். தற்போது முதல்வர் பதவி அவரைத் தேடி வந்துள்ளது.